Thursday 30 October 2014

நலம். நலம் அறிய அவா


 அறிவும் ஆற்றலும் மிகுந்த என் அன்பு மகளுக்கு,

        வாழ்க வளமுடன். அம்மாவும் நானும் நலமாக உள்ளோம். இன்று உன் பிறந்த நாள். உனக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உன் அக்கா பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து நீ பிறந்தாய். வலிக்கிறதே என்று உன் அம்மா சொன்னபோது மாலை நான்கு மணி இருக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவ மனையில் சேர்த்தேன். ஒரு பட்டியலைக் கொடுத்து உடனே வாங்கி வருமாறு மருத்துவர் கூற மருந்துக்கடையை நோக்கி விரைந்தேன். இருபது நிமிடங்களில் திரும்பினேன். பெண் குழந்தை பிறந்துள்ளாள் என்று செவிலி ஒருவர் மகிழ்ச்சியோடு கூறினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் நீ தொட்டிலில், அம்மா கட்டிலில்., உன் அக்காவும் நானும் நீ அழுவதையும் அசைவதையும் பார்த்தபடி மகிழ்ச்சியில் திளைத்தோம். கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி நீ சுகமாகப் பிறந்தாய். அம்மா கொடுத்து வைத்தவள். நானும் அப்படியே. சினிமாவில் வருவதுபோல் அறுவை அரங்கத்திற்கு அருகில் பதட்டத்தோடு நீ என்னைக் காக்க வைக்கவில்லை.

   காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழல்கின்றது! B.E  பட்டம் பெற்ற கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையிலும் சேர்ந்துவிட்டாய். இவள்(ன்) தந்தை என் நோற்றான் என்று வள்ளுவர் கூறுவாரே அப்படிப்பட்ட மகிழ்ச்சியில்தான் நான் உள்ளேன்.

   தொடர்ந்து படிக்கப்போவதாகச் சொன்னாய்., மகிழ்ச்சி. படிப்பு ஒன்றுதான் ஒரு பெண்ணுக்குத் தற்சார்பு(self reliance) நிலையை அளிக்கும். பாடநூல்களோடு மற்ற நல்ல நூல்களையும் படி. இது உன் வாழ்வின் பிற்பகுதியில் மறதி நோய்(Alzheimer’s disease) தாக்காமல் உன்னைக்காக்கும். நீ படிக்கும் பழக்கம் உடையவள். நீ பன்னிரண்டாவது படித்தபோது, மறுநாள் பொதுத்தேர்வே என்றாலும் இரவில்  ஆர்.கே.நாராயணன் நாவலில் பத்துப் பக்கமாவது படித்துவிட்டுதான்  உறங்கச் செல்வாய். வாழ்நாள் முழுவதும் படி. அதுவே உன் பொழுதாக்கமாக(hobby) அமையட்டும்.

     பெரிதினும் பெரிது கேள் என்பார் பாரதியார் தன் புதிய ஆத்திசூடியில். நீயும் பெரிய அளவில் சம்பாதிக்கத் திட்டமிடு. ஆனால் அறவழியில் சம்பாதிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்து. அறத்தான் வருவதே இன்பம் – இதுதான் வள்ளுவர் காட்டும் வழி.

   அடுத்து, நீ பலமுள்ளவள் என்று நினை., சொல்., செயல்படு. ஆணாதிக்கச் சதிகாரர் சிலர் பெண்களை weaker sex என்று முத்திரை குத்திவிட்டார்கள். உண்மையில் பெண்கள்தாம் சக்தி மிகுந்தவர்கள்.  இந்தச் சக்தி மட்டும் இல்லாவிட்டால் ஆண்கள் சிவனே என்று இருக்கவேண்டியதுதான். woman is no longer a weaker sex. In fact, man is the weaker sex.

     உனது நேரத்தில் ஒரு பகுதியை, உனது ஊதியத்தில் ஒரு பகுதியை சமுதாய மேம்பாட்டிற்காகச் செலவிடு. இயலாதவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் இணைத்துக்கொண்டு வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை(inclusive life)
  வாங்கரி மாத்தாயை நீ அறிவாய். உன்னைவிடச் சிறியவளான மலாலாவை நன்கு அறிவாய். பெண்ணால் சாதிக்க முடியும் என வாழ்ந்துகாட்டியவள் முன்னவள். உலகத்தைத் தன் பக்கம் பார்க்க வைத்துள்ளாள் பின்னவள். இவர்களைப் போல நீயும் சாதிக்க முடியும். உனது வாழ்க்கை பொருளுடையதாய்(wealth) இருந்தால் மட்டும் போதாது., பொருள்(meaning)  உடையதாயும்இருக்கவேண்டும்.

     நிறைவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உன் நாவைக் காத்துக்கொள். எதையும் யாரிடமும் பேசும் முன் சற்று யோசி. சக பயணிகளிடம், முன்பின் தெரியாதவர்களிடம் உன் சொந்த விவரங்களைக் கூறாதே. பேசிய  வார்த்தைகள் கொட்டிய பாலுக்குச் சமம். அதேபோல் வாக்கு வாதம் செய்வது நட்பையும் உறவையும் முறிக்கும். “பெரியவர்களிடம் குறை கண்டால் நான் மவுனமாய் இருந்து விடுவேன்” என்று தன் சத்திய சோதனை நூலில் குறிப்பிடுகிறார் காந்தியடிகள். நீயும் படித்திருப்பாயே. என் அன்பு மகளே! வள்ளுவர்  சொல்வதுபோல் கசடறக் கற்கவும் வேண்டும் கற்றபடி நிற்கவும் வேண்டும்.

    வளரும் பயிருக்குதான் நீர் பாய்ச்ச வேண்டும். அதுபோல உணரக்கூடியவர்களுக்குதான் அறிவுரை நல்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுவார்.(குறள் 718). நீ வளரும் பயிர் என்பதால் சிலவற்றை இம்மடலில் கூறினேன். அவற்றை எண்ணிப்பார்த்துக் கொள்ளுவனக் கொள்ளுக., தள்ளுவனத் தள்ளுக.

உணவும் உறக்கமும் அளவாய் இருக்கட்டும். உற்சாகம் அதிகமாய் இருக்கட்டும்.

என்றும் மாறாத அன்புடன்,
உன் அப்பா

பி.கு:

     நீ விரும்பிய வண்ணம், உன் பிறந்தநாளை முன்னிட்டு இயலாத நூறு முதியவர்களின் ஒருநாள் மதிய உணவிற்காக கரூர் ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில், நீ தந்த பணத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்தி, உரிய பற்றுச்சீட்டைப் பெற்று, கோப்பில் வைத்துள்ளேன்.

Sunday 26 October 2014

மலரும் நினைவுகள்


                          என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
                          தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
                                                                                                -திருமூலர்


     தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறை இப்போது வழக்கொழிந்து விட்டது. ஆனால் தொலைப்பேசி பரவலாக பயன்பாட்டில் இல்லாத காலத்தில் தந்திதான் தகவல் தொடர்பு சாதனமாக விளங்கியது. அந்தக்காலத்தில் தந்தி வந்தால் என்னமோ ஏதோ என்று மக்கள் மனம் கலங்குவர். ஆனால் எனக்கு வந்த தந்திகள் எல்லாம் நல்ல செய்திகளையே தாங்கி வந்தன.

  YOU ARE APPOINTED AS LAB ASSISTANT என்ற செய்தியோடு கோவை நேரு வித்யாலயா பள்ளியிலிருந்து வந்த தந்தி. YOU ARE APPOINTED AS PG TEACHER  என்ற செய்தியோடு கோபிசெட்டிபாளையம்  வைரவிழா மேனிலைப்பள்ளியிலிருந்து வந்த தந்தி.

 முதல் குழந்தைப் பேற்றுக்காக என் மனைவி தாய் வீடு சென்றிருந்த சமயத்தில், YOU ARE BLESSED WITH A DAUGHTER என்ற செய்தியோடு வந்த தந்தி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவச்செய்தது. அப்பா என்னும் பேற்றுக்கு என்னை ஆளாக்கிய மகளைக்காண தந்தியைவிட விரைவாகச் சென்றேன்.

 அவள் பிறந்த யோகத்தால் YOU ARE ELECTED AS SENATE MEMBER FOR THREE YEARS என்ற செய்தியோடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த தந்தியும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

YOU ARE APPOINTED AS PRINCIPAL  என்ற செய்தியைத் தாங்கி, காகிதபுரம் TNPL பள்ளியிலிருந்து வந்த தந்தி. இது குறிப்பிடத்தக்க ஒன்று. கடும் போட்டிக்கிடையே நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்படியாக நல்ல செய்திகள் நாடி வந்தன.

  இவற்றுக்கு இடையில், 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி வந்த தந்திச் செய்திதான் வாழ்வில் மறக்க முடியாதது. நடுவணரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து வந்தது அத்தந்திஅந்தச் செய்தி என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நாட்டின் உயரிய விருது உங்களுக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தியே அது. I AM PRIVILEGED TO INFORM YOU THAT YOU HAVE BEEN SELECTED FOR THE NATIONAL AWARD என்ற வரிகளைக் கண்ணால் பார்த்து, கைவிரலால் தொட்டு, பலமுறையும் படித்தேன். இவ்விருதுக்கு என்னைப் பரிந்துரைத்த கோபி மாவட்டக் கல்வி அலுவலர், மிக நேர்மையான அதிகாரி திரு நரேஷ் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்தேன்உணர்வு நிலையிலிருந்து உலக நிலைக்கு வர ஒரு மணி நேரம் ஆயிற்று.

    உற்றார் உறவினர் நண்பர்கள் மாணவர்கள் என அனைவரும் ஈரோடு இரயில் நிலையத்திற்கு வந்து வழியனுப்பிவைத்தார்கள். நானும் என் மனைவியும் 36 மணிநேர பயணத்திற்குப் பிறகு புதுதில்லி ஜன்பத் ஹோட்டலுக்குச் சென்று அரசுச் செலவில் தங்கினோம்செப்டெம்பர் நான்காம் தேதி காலையில் விக்யான் பவனில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றேன். குடியரசுத் தலைவரிடமிருந்து விருதினைப் பெறும்போது செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை எவை என்பதற்கான பயிற்சிதான் அது.

  அன்று மதியம்  புகழ்பெற்ற இம்ப்பீரியல்ஹோட்டலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி விருந்தளித்தார். அன்று மாலையில் பிரதமர் வாஜ்பாயி அவர்களுடனான சந்திப்பில் பங்கேற்றேன். நிறைவாக, விருதாளர்கள் சார்பாக என்னை அழைத்தபோது எந்தத்தயக்கமும் இல்லாமல் மேடையேறி நன்றியுரையாற்றினேன்செந்தமிழும் நாப்பழக்கம் ஆங்கிலத்திற்கும் அதே பழக்கம் என்னும் கோட்பாட்டோடு பேசிப்பழகிய ஆங்கிலம் தமிழாசிரியராகிய எனக்கு நன்றாகவே கைகொடுத்தது. தொடர்ந்து நடந்த விருந்தின்போது வடக்கத்திய விருதாளர் பலரும் என்னைப் பாராட்டினார்கள்.

   மறுநாள் நிகழ்வை எண்ணி எண்ணி இரவில் தூங்கவில்லை. அதிகாலையில் எழுந்து விரைந்து விழாவுக்குத் தயாரானோம். குறித்த நேரத்தில் விழா அரங்கிற்குச் சென்றோம். மூன்றடுக்குச் சோதனைக்குப் பிறகு என்னை அரங்கின் முன்பகுதியிலும் என் மனைவியைப் பார்வையாளர் பகுதியிலும் அமரவைத்தார்கள். சரியான நேரத்தில் குடியரசுத் தலைவர் டாக்டர் பி ஜெ அப்துல் கலாம் அவர்களும் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி அவர்களும் மேடையை நோக்கி வந்தார்கள். அனைவரும் எழுந்து நின்றோம்., நாட்டுப்பண் இசை நிறைவுற்றதும் அமர்ந்தோம். முரளி மனோகரின் வரவேற்புரைக்குப்பிறகு, டாக்டர் கலாம் அவர்கள் சிறப்புரையாற்றினார். நாட்டின் எதிர்காலம் ஆசிரியர் கைகளில் உள்ளது என்பதை உணர்த்தினார்.  அன்றைய தினமணியில் வந்திருந்த ஆசிரியர் தின கட்டுரையை மேற்கோள் காட்டிப் பேசியபோது எனது நாடி நரம்புகளெல்லாம் புடைத்தெழுந்தன. காரணம் அந்தக் கட்டுரையை எழுதியதே நான்தான்!

     அவருடைய  உரைக்குப் பிறகு விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. அகர வரிசையில் அழைத்தார்கள். என்னுடைய முறை வந்தது. தோன்றின் புகழொடு தோன்றுக என்று வள்ளுவர் குறிப்பிடுவார்.அத்தகைய பெருமிதத்தோடு மேடை நோக்கிச் சென்றேன்., டாக்டர் கலாம் அவர்களின் கண்களை நோக்கியபடி, புன்முறுவலுடன் அவர் அளித்த விருது, வெள்ளிப்பதக்கம், ரூபாய் 25000 க்கான வங்கிவரைவு ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டேன்கனவு காணச்சொன்னீர்கள்., என் கனவு இந்தக்கணத்தில் நனவானது” என்று சொன்னேன். மகிழ்ச்சி என்று சொன்னபடி கைகுலுக்கி விடைகொடுத்தார். நான் தமிழில் பேசியது எதுவும் புரியாததால் அருகில் நின்ற ஜோஷி அவர்கள் என்னை வியந்து நோக்கினார்விருது பெற்ற அந்தக்கணம், அந்த மகிழ்ச்சியை உணரத்தான் முடிந்ததே தவிர இன்றளவும் உரைக்க முடியவில்லை.

  விழா நிறைவுற்று அரங்கைவிட்டு வெளியில் வந்ததும், INDAIN EXPRESS   நிருபர் ஒருவர் How did you feel when you  received the National Award? என்று கேட்டார்.It was just an ecstatic experience என்று சொன்னேன்.

 தமிழகம் திரும்பியதும் ஊடக நண்பர்கள் சூழ்ந்துகொண்டு பேட்டி கண்டார்கள். மிகக்குறைந்த வயதில் தேசிய விருது பெற்றவர், அதுவும் மாநில விருது பெறாமல் நேரடியாக தேசிய விருதைப் பெற்றவர் என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டார்கள்.  ஆங்கில நாளேட்டில் An extraordinary teacher and plucky puppeteer என்னும் தலைப்பில் ஒரு செய்திக்கட்டுரையை வெளியிட்டார்கள்.(INDIAN EXPRESS dt 11.10.2003) கோவை வானொலி நிலையத்தார் ஒரு பேட்டி கண்டு ஒலிபரப்பினார்கள்.

    1980 முதல் 2003 வரை 23 ஆண்டுகள் மாணவர்களின் துணையோடு  ஆற்றிய சுற்றுச்சூழல் மேம்பாட்டுப்பணிக்காக வழங்கப்பட்டதுதான் இந்த விருது.

   ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து,  ஆசிரியப்பணியை விரும்பி ஏற்று, இன்றளவும் அப்பணியை ஓர் அறப்பணியாக மகிழ்ச்சியுடன் செய்துகொண்டிருக்கும் இந்த எளியவனுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம் அல்லவா இவ்விருது!
            


     Dr.A.P.J.Abdul Kalam confers the National Award. Dr.Murli Manohar Joshi looks on.
                               Vigyan Bhavan, New Delhi  5th September 2003     


Tuesday 21 October 2014

என்று மடியும் இந்த தீபாவளி மோகம்



      கரூர் கடைத்தெருவுக்கு அருகிலே என் நண்பரின் வீடு உள்ளது. காரை அவர் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, பேருந்தில் கோவைக்குச் சென்று மாலையில் திரும்பினேன். வந்து என் காரை பார்த்ததும் எனக்குத் தலை சுற்றியது. காரைச் சுற்றி சுமார் இருபது இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். பட்டாசுக் கட்டுகளையும் துணிக்கடைப் பைகளையும் தூக்கியபடி நகர்ந்தனர். அக்கூட்டத்தில் எனக்குத் தெரிந்த நூலகர் ஒருவர் ஓடி வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி உதவியதால் என் காரை எடுக்க முடிந்தது. வீட்டுக்குச் செல்கிற வரைக்கும் நடந்து சென்றவர்கள் கூட என் காரை முந்திச் சென்றார்கள் என்றால் நான் எவ்வளவு வேகத்தில் ஓட்டியிருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
    ஓர் இடத்தில் போக்குவரத்துக் காவலர் பெருங்கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியாமல் திணறினார். திரும்பிப் பார்த்தேன். அது ஒரு டாஸ்மார்க் கடை! சென்ற தீபாவளியின்போது மிக அதிக மது விற்பனை நடந்தது எங்கள் கரூரில்தான்! அந்தப் பெருமையை(notoriously famous) இந்த ஆண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் குடி மக்கள். அமராவதி பாலத்தில் மொடாக்குடியர் சிலர் அலங்கோலமாக போதையில் அதுவும் பாதையில் கிடந்தனர்.
   ஒருவழியாக வீடுவந்து சேர்ந்தேன். சற்று ஓய்வுக்குப் பின் துணைவியார் ஆசை ஆசையாய் செய்து கொடுத்த அருமையான குலோப் ஜாமூனை சுவைத்தபடி இக் கட்டுரையைத் தட்டச்சு செய்யத் தொடங்கினேன்.
    தேம்பித் தேம்பி அழும் குழந்தையைப் போல, விட்டு விட்டுத் தூறிக்கொண்டிருந்தது மழை. எனவே எங்கள் தெருவில் வெடிச்சத்தம் அவ்வளவாக இல்லை. வெடிப்பதால் எழும் புகை, சத்தம் எல்லாம் சுற்றுப்புறச்சூழலைக் கெடுக்கும். அது சிறு குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பெரும் தொல்லையைத் தரும். என் இளைய மகள் தீபாவளி சமயத்தில் பிறந்தவள். அந்த மருத்துவ மனயைச் சுற்றியிருந்த வீட்டுக்காரர்களை அணுகி பேரொலி எழுப்பும் லட்சுமி வெடிபோன்றவற்றை வெடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதும் அவர்கள் ஒத்துழைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது.
   நாங்கள் தீபாவளிக்கு வெடி வாங்குவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு மகள்களும் வெடி வெடிப்பதால் ஏற்படும் கேடுகளை உணரத் தொடங்கியதும் வெடிச்சத்தம் கேட்பதில்லை. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் குறைந்த அளவில் பட்டாசுகளைப் பயன்படுத்தலாம்.
   பட்டாசு வாங்கும் பணத்தை ஒரு உருப்படியான செலவுக்குப் பயன்படுத்துகிறோம். கரூரில் வள்ளலார் கோட்டம் என்ற அமைப்பு உள்ளது. இவ்வமைப்பினர் தினம்தோறும் சூடாகச் சமைத்த உணவை மதிய நேரத்தில் ஆதரவற்ற நூறு முதியோர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று அன்புடன் அளிக்கிறார்கள். இதற்கு தினம்தோறும் ஆயிரம் ரூபாய் செலவாகிறதாம். முற்றிலும் நன்கொடையாளர்களை நம்பிதான் இத்திட்டம் செயல்படுகிறது. பட்டாசு வெடித்து மகிழ்வதைவிட, இந்த அன்ன தானத்திற்கு கொடுத்து மகிழ்வது சிறப்பல்லவா? இன்பங்களுள் மிகச்சிறந்தது ஈத்துவக்கும் இன்பம் என்று வள்ளுவர் குறிப்பிடுவார்.
     அரசுப்பள்ளியிலும், அரசுக் கல்லூரியிலும் படித்தவன் நான். குப்பனும் சுப்பனும் கொடுத்த வரிப்பணத்தில் படித்தவன். அப்போது சமுதாயத்திலிருந்து எடுத்ததை இப்போது திருப்பிக் கொடுப்பது என்னும் ஞானோதயம் ஏற்பட்டதால்தான் மேற்படி திட்டத்திற்குத் தோள் கொடுக்கத் தொடங்கினேன். பிறந்தநாள், மணநாள் என ஒவ்வொரு நிகழ்விலும் கொடுத்து மகிழ்கிறோம்.
    இனி, தீபாவளி சமயத்தில் குடிப்போரும் வெடிப்போரும் கொடுப்போராய் மாறுவார்களாக.
    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
   


   

Sunday 19 October 2014

தொடர்வது ஹைக்கூ



     சென்ற வாரம் ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் சில ஹைக்கூ கவிதைகளைப் புனைந்து என் வலைப் பூப் பக்கத்தில் வெளியிட்டேன். அதற்கு இத்தனைப் பின்னூட்டங்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை.
    எனது தலைமாணாக்கரில் ஒருவரான பெரும்புகழ் வாய்ந்த மருத்துவர் க.கண்ணன் அவர்கள் தன் பின்னூட்டத்தை ஒரு ஹைக்கூவாகவே புனைந்து அனுப்பியிருந்தார். அவர் எழுதியிருந்த கவிதை இதுதான்

மணக்கிறது
மட்டன் பிரியாணி
சைவச் சமையலரின் கைவண்ணத்தில்.

இந்தக் கவிதை வரிகளை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். அது எனது ஹைக்கூ வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட நெய்யாக  அமைந்தது.
ஹைக்கூ திலகம் இரா.இரவி அவர்கள் அனுப்பிய பின்னூட்ட மின்னஞ்சல் எனது எழுதுகோலுக்கு ஊற்றப்பட்ட மையாக அமைந்தது. எழுது கோலை எடுத்தேன்., எழுதினேன்.
  தீபாவளி நேரத்தில் பதிகிறேன். இவ் வெடிகள் வெடிக்கலாம்., வெடிக்காமலும் போகலாம்..

இதோ எனது ஹைக்கூ வெடிகள் 


எதைப்புதைத்தாலும்
மண்ணில் மக்கும்
விதை மட்டும் முளைக்கும்

தமிழர்கள் அனைவரும்
புதுமொழி பேசுகிறார்கள்
தமிங்கலம்

ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலைப் பெற்று
ஆங்கிலத்திடம் தொலைத்தோம்.

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
வெவ்வேறு திசைகளில்

அம்மா
மெட்ரிக் படித்தபோது மம்மி
மேரேஜ் ஆனதும் டம்மி


திருக்குறள் அறிவிலார்
என்னுடையரேனும்
இலர்.

வல்வில் ஓரியைத் தெரியுமா?
தமிழ்ப்பட்டதாரி சொன்னார்
ஐ ஆம் சாரி!

காலையில் கைது
மாலையில் விடுதலை
மழலையர் பள்ளியில்

பேச்சுரிமை இருந்தும்
பேசிட உரிமையில்லை
பள்ளிகளில்

பள்ளித்தலமனைத்தும்
நோயில் செய்குவோம்
பாரதி மன்னிக்க


விளைநிலம் ரியல்எஸ்டேட்காரரின்
விழை நிலமாகி, பின்னர்
விலை நிலமானது

தெரு நெடுகிலும்
மின்சார விளக்குகள்., அவை
மின்சாரா விளக்குகள்.

காந்திக்கு இல்லை
ரசிகர் மன்றம்., உண்டு
காந்தியாக நடித்தவருக்கு.

தீபாவளி
மகனுக்குத் தன் இல்லத்தில்
அப்பாவுக்கு முதியோர் இல்லத்தில்

இருகால் விலங்குக்கு
வாழ்வில்லை
ஒருகால் தாவரம் இல்லை எனின்.