Saturday 29 November 2014

இதிலும் கூட ஆடம்பரமா?


   பழுத்த பழமாக இருந்த முதியவர் ஒருவர் சென்ற வாரம் காலமாகிவிட்டார். மகன் மகள் அனைவரும் நகரின் வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் அம்முதியவர் தன் வீட்டில் இருந்தபடி தலைசாய்த்துவிட்டார். பெரிய மர அறுப்பு மில் வைத்திருந்தவர், கடைசி காலத்தில் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கக் கூட ஆளின்றி போய்சேர்ந்துவிட்டார். பக்கத்து வீட்டார் அவருடைய மகனுக்குச் செய்தி சொல்ல, அதன் பிறகு நடந்தவைதான் அட்டூழியமாக இருந்தன.

    அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிர்சாதனப் பெட்டி வந்தது., வீட்டின்முன் பெரிய சாமியானா பந்தல் முளைத்தது., தாரை தப்பட்டைக்காரர்கள் வந்து கொட்டி முழக்கினார்கள்., கொஞ்சநேரத்தில் மைக்செட்டுடன் ஒரு வண்டி வந்தது. அந்த வீட்டின் இருபக்கத்திலும் இருந்த மின்கம்பங்களில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டிரண்டு கூம்பு வடிவ ஒலிப்பான்களை கட்டினார்கள். சிறிது நேரத்தில் காதை பிளக்கும் ஒலியளவில் ஒப்பாரிப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. மணிக்கு இவ்வளவு என வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைப்பதற்கு என்றே பெண்கள் இருக்கிறார்களாம்! அந்த வீட்டின் அருகில் இருந்த மேனிலைப்பள்ளியின் குழந்தைகள்  இந்த கர்ண கொடூர ஒப்பாரி ஓலங்களை எப்படிதான் சகித்துக் கொண்டார்களோ!

    சற்றுநேரத்தில் அமரர் ரதம் தயாராயிற்று. குறைந்த்து 100 கிலோ ரோஜா பூக்கள் அதற்காகப் பயன்பட்டிருக்கும். இறுதி ஊர்வலத்தின்போது இன்னொரு 100 கிலோ பூக்களை வழி நெடுகிலும் வாரி இறைத்துக்கொண்டே சென்றனர்.

     
அங்கங்கே சாலையில் நீண்ட சரவெடிகளைக் கொளுத்திப் போட்டனர். வாகனச் சக்கரங்களில் பூக்கள் அரைபட்டு அலங்கோலமாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் வெடித்துச் சிதறிய காகிதக்குப்பைகள் கிடந்தன.

அத்தனை நாளேடுகளிலும் வந்த முழுப்பக்க விளம்பரம் இறந்துபோன முதியவரின் மகன், மகள், பேரக்குழைந்தைகள், அவர்களுடைய கல்விதகுதி மற்றும் பதவி விவரம் அனைத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. விளம்பரத்திற்கு மட்டும் ஒரு லட்சம் செலவாகியிருக்கும்.

   மறுநாள் ஒரு நண்பரோடு இந்தக் கூத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவர் சொன்ன செய்தி அதிர்ச்சியளித்த்து. கடைசிக் காலத்தில் அந்தப் பெரியவர் சரியாக சாப்பாடும் மருந்தும் கிடைக்காமல் மரணப்படுக்கையில் கிடந்தாராம். இருக்கும்போது இருபது ரூபாய் செலவு செய்யாதவர் தந்தை இறந்தபோது இரண்டு லட்சம் செலவு செய்கிறார்.

   போனமாதம் இரங்கலைத் தெரிவிக்க ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன். 90 வயதைத் தாண்டிய பெண்மனி மூச்சடங்கிவிட்டார். ஒரு மர பெஞ்சின்மீது வெண்துகில் விரிக்கப்பட்டு அதில் கிடத்தப்பட்டிருந்தார் இயல்பாக உறங்குவது போல இருந்தது..உறங்குவது போலும் சாக்காடு என்று திருவள்ளுவர் கூறியது உண்மைதான்.

    அங்கே யரும் அழுது புலம்பவில்லை. மூத்தமகள் அருகில் அமர்ந்து திருவாசகத்தை மெல்லிய குரலில் படித்துக்கொண்டிருந்தார். பேரன்கள் மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அழுது அரற்றியபடி வந்த கிராமத்துப் பெண்கள் சிலர் அங்கிருந்த சூழலைப் பார்த்ததும் அமைதியாயினர்.

    சற்று நேரத்தில் அங்கு வந்த வயதான தமிழாசிரியர் ஒருவர் பட்டினத்தார் பாடல்களை முகாரிப்பண்ணில் பாடியது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து, அவரே முன்னின்று திருமந்திரம், திருக்குறள் செய்யுள் வரிகளை விளக்கியபடி சடங்குகளை செய்து முடித்தார். பின்னர் அங்கு வந்த அமரர் வாகனத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

    அந்த ஊருக்கு அப்பாலிருந்த மின்தகன மயானத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த வளாகம் அவ்வளவு தூய்மையாக இருந்தது. திருக்குறள் நிலையாமை அதிகாரத்திலிருந்த குறள்பாக்கள் கிரானைட் பலகைகளில் செதுக்கப்பட்டிருந்தன.

    செவிகளுக்கும் இதயத்திற்கும் இதமாக வைரமுத்துவின் இரங்கல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் வீடு திரும்பியதும் நினைவில் நின்ற அப் பாடல் வரிகள் சிலவற்றை நாட்குறிப்பேட்டில் எழுதிவைத்தேன்.  அவற்றுள் சில வரிகள் இங்கே:

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையு மில்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

இறப்பு இல்லாமல் நாளொன்று மில்லை
மறதியைப் போலொரு மாமருந்தில்லை
கதைமுடிந் தாலும் கவலைகள் வேண்டா
விதைஒன்று வீழினும் செடிவந்து சேரும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோந்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்
  என்னைப் பொருத்தவரையில், மாறிவரும் காலச்சூழலில், பழைய ஒப்பாரியை ஓரங்கட்டிவிட்டு,கொட்டி முழக்கி, வெடி வெடித்து ஒலிமாசு ஏற்படுத்தாமல், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த ஆன்மாவை திருவாசகத்தைப் பாடி வழியனுப்பிய விதம் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் போற்றும்படியாகவும் இருந்தது.

   எதிலும் ஆடம்பரம் வேண்டா. இறப்பில் அறவே வேண்டா.


   

Saturday 22 November 2014

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்



    சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர் என்பது அதிவீரராம பாண்டியர் எழுதியுள்ள வெற்றிவேற்கை பாடல் வரியாகும். ஆனாலும் பல சமயங்களில் வளர்ந்த குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். சின்னப்பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்று ஒரு பழமொழி எங்கள் திருச்சி மாவட்டத்தில் உண்டு.

   குழந்தைகளை நம்பி ஒரு செயலை ஒப்படைக்கலாம் என்பதற்குச் சான்றாக சென்ற வாரம் குழந்தைகள் தினத்தன்று(நவம்பர் 14) நடந்தது. நினைத்தாலே இனிக்கும் நிகழ்வு அது.

   முதல் நாள் என் அறையில் சற்றே ஓய்வாக இந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். "மே வி கம் இன் சார்" என்று கூறியபடி ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இருவர் வந்து ஒரு திட்டத்தைக் கூறி அனுமதி கேட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் விதைத்த விதை முளைக்கத் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியில் அனுமதி கொடுத்தேன்.

 அவர்கள் கேட்டவுடன் அனுமதி தந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
     என் பள்ளிப் பருவ நிகழ்வுகளை இன்றும் என் மனைவி, மகள்களோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வேன். பாவம் இந்தக் காலத்துக் குழந்தைகள். எப்போது பார்த்தாலும் படிப்புதான். சொல்லிக்கொள்ளும் வகையில் பள்ளிப்பருவ நிகழ்வுகள் எதுவும் இருக்காது. என்னுடைய அணுகுமுறை சற்று வித்தியாசமானது. எனது மாணவர்களை கொஞ்சம் குறும்பு செய்யவும் அனுமதிப்பேன். வித்தியாசமாக ஏதேனும் செய்ய முன்வந்தால் அனுமதிப்பேன். பின்னாளில் அவர்கள் நினைத்து மகிழத்தக்கச் செயலாக அமையும் என்பதால் அனுமதித்தேன்.

    சென்ற ஆண்டு கொடுத்து மகிழ்வோம் என்ற திட்டத்தின்படி குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆறாயிரம் ரூபாய் திரட்டிக்கொடுத்தனர். கரூர் வள்ளலார் கோட்டத்தினர் பள்ளிக்கு வந்து காலை வழிபாட்டுக்கூட்டத்தின்போது முதியோர் மதிய உணவுத்திட்டத்திற்காக அந்நிதியைப் பெற்றுச்சென்றனர். ஆண்டுதோறும் இது தொடர்கிறது.

   மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் அனைவரும் உற்சாகமாக பணியைத் தொடங்கினார்கள். தம் பெற்றோர்களை அசத்தித் தேவையான எல்லாவற்றையும் கொண்டுவந்து குவித்துவிட்டார்கள். அடுப்புக் கூட்டுவது, காய்கறிகளைக் கழுவி நறுக்குவது, அரிசியைக் கழுவி உலையில் போடுவது, மிக்சியில் மசாலா அரைப்பது, தயிர்ப்பச்சடிக்கு பெரிய வெங்காயத்தை உரித்து நறுக்குவது என வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்தார்கள். அவர்கள் செய்து பழகட்டும் என்று எண்ணி நான் ஆசிரியைகள் எவரையும் அங்கே அனுப்பவில்லை. அவ்வப்போது சென்று உற்சாகப்படுத்திவந்தேன்.

     சற்று தூரத்தில் ஆசிரியர்களுக்காக மாணவர்களும், மாணவர்களுக்காக ஆசிரியர்களும் மேடையில் ஆட்டம் ஆடி பட்டையைக் கிளப்பிக்கொணடிருந்தார்கள். அவை எதுவும் இவர்களுடைய கவனத்தைக் கவரவில்லை. கருமமே கண்ணாக இருந்தார்கள். சரியாக 11.30 மணிக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர்ப்பச்சடி, வடை,  மீல்மேக்கர் வருவல் எல்லாம் தயார். சுவைத்துப்பார்த்தேன்.,  படு சுவையாக இருந்தன. எல்லாவற்றையும் ஹாட்பேக்கில் போட்டு எடுத்துக்கொண்டு விரைந்தனர்.

    பள்ளியின் அருகில் உள்ள டிரினிட்டி ஹோம் எனப்படும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் இருபது பேர் கொண்ட காப்பகத்திற்குச் சென்று சூடாகப் பரிமாறினார்கள். அந்தக் குழந்தைகள் வயிறார உண்டதைக்கண்டு இந்தக் குழந்தைகள் மகிழ்ந்தார்கள். ஒரு மகத்தான செயலைச் செய்த மன நிறைவோடு தத்தம் வீட்டிலிருந்து கொண்டுவந்த தயிர் சாதத்தைப் சாப்பிட்டுவிட்டு  வழக்கம்போல் தம் பணிகளைத் தொடர்ந்தனர்.

     இரண்டாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்து விளம்பரம் தேடும் பெரிய மனிதர்களைவிட இருபது பேர்களுக்கு ஆரவாரமின்றி உணவளித்த இந்தச் சிறியவர்கள் பத்து மடங்கு மேலானவர்கள். மனிதநேயம் மிகுந்த எனது மாணவியரை மனதில் எண்ணி மகிழ்ந்தபடி நானும் பிற்பகல் பணிகளில் ஈடுபடலானேன்.

  சிறியோர் எல்லாம் சிறியோர் அல்லர். உண்மைதானே?

 பெரியவர்கள் வழி காட்டினால், சிறு பிள்ளைகள் இட்ட வெள்ளாமையும் வீடு வந்து சேரும்.


    

Wednesday 19 November 2014

மனித குலத்தின் பொது எதிரி


   மனித குலத்தின் ஒரே பொது எதிரி நெகிழிதான். அதை பிளாஸ்டிக் என்று சென்னால்தான் புரியும்.
   
         ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி முடியும் என்று எதிர் கேள்வி கேட்டான் ஒரு மாணவன். பிளாஸ்டிக் குழாய் இல்லாவிட்டால் குளியலறையில் தண்ணீர் வராது என்றான். அவன் சொல்வது உண்மைதான்.

   இன்று இயந்திரங்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் தவிர்க்க இயலாதவை. மருத்துவம் சார்ந்த கருவிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் வேண்டுமா?

சென்ற வாரம் ஒரு திருமண விருந்திற்குப் போயிருந்தேன். வாழை இலை போட்டு உணவைப் பரிமாறினார்கள். கூர்ந்து பார்த்தபோது தெரிந்தது. அது ஒரு பிளாஸ்டிக் வாழை இலை! அசப்பில் வாழை இலையைப் போலவே இருந்தது. சாம்பார் சாதத்தோடு எழுந்து வந்துவிட்டேன். அங்கு பந்தலில் தொங்கிய மாவிலைத் தோரணங்களைப் பார்த்தேன். மாவிலைகள் அனைத்தும் பிளாஸ்டிக்! அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகள், தொட்டியில் இருந்த செடிகள் அனைத்தும் பிளாஸ்டிக்!  வரவேற்பு மேசைமீதிருந்த தாம்பாளத்தில் இருந்த பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக்! அவர்கள் கொடுத்தது பாலித்தின் தாம்பூலப்பை! அந்தப் பையைத் திறந்து பார்த்தால் அதில் இருந்தது ஒரு பிளாஸ்டிக் டிஃபின் பாக்ஸ். நல்ல வேளை அதில் இருந்த பாக்கும் வெற்றிலையும் பிளாஸ்டிக்கால் ஆனவை அல்ல!
இது என்ன கொடுமை!

  செருப்பு பயன் உடையதுதான். அதற்காக பூஜை அறையிலும் காலில் போட்டுக்கொள்ள வேண்டுமா என்ன? சற்றே சிந்திக்க வேண்டாமா?

தன்னையே அழிக்கும் வல்லமையுடையன என்பதை அறியாமல் பல பொருள்களை மனிதன் கண்டுபிடித்துவிட்டான். அவற்றுள் ஒன்று இந்த பிளாஸ்டிக்.  PVC என்றும் polythene என்றும் செல்லப் பெயரிட்டு அழைத்தான். (PVC-Poly Vinyl Chloride) அது அவனைக் கொல்ல வந்த யமன் என்பதை எப்போது உணரப் போகிறானோ?

பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் போதும், பழைய பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கும் போதும் டயாக்சின் (dioxin) என்னும் உயிர்க்கொல்லி வாயு வெளியாகிறது. இந்த நச்சு வாயுவை சுவாசிக்கும் மனிதனுக்கு வரும் நோய்கள் எண்ணற்றவை. அவற்றுள் சில : புற்றுநோய், சர்க்கரை நோய், தோல் நோய், கல்லீரல் அழுகல் நோய் மற்றும் மலட்டுத் தன்மை உருவாதல்.

1997 ஆம் ஆண்டு நம் நாட்டில் சராசரியாக ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு ஆண்டிற்கு 1.7 கிலோ என்று இருந்தது. ஆனால் தற்போது ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு 10.5 கிலோ என உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 1,70.000 டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைவாக வளி மண்டலத்தில் டயாக்சின் வாயுவின் அளவு அதிகமாகிக் கொண்டே உள்ளது.

ஒரு மனிதன் இந்த டயாக்சின் வாயுவை  குண்டூசி தலையின் எடைக்குமேல் முகர்ந்தால் இறக்க நேரிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைப்பற்றி   யார்  கவலைப்படுகிறார்கள்?  வரும் முன் காக்கும் மனப்பாங்கு நம்மிடத்தில் மிகவும் குறைவு.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
என்று வள்ளுவர் கூறுவது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது.

மண்ணில் மக்குவதற்கு பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்துக் கொள்ளும் காலம் 500 முதல் 1000 ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளனர். இதை எளிதில் மக்கச் செய்யும் மகத்துவத்தை யாரேனும் கண்டு பிடித்தால் அவருக்கு இரண்டு நோபல் பரிசுகளை ஒரே சமயத்தில் கொடுக்கலாம்.
அதுவரை நாம் என்ன செய்யலாம்?

01.          பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம் அல்லது குறைப்போம்
.
02.          பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்தபின் கண்ட இடங்களில் போடாமல், சேர்த்து வைத்து மறு சுழற்சிக்கு அனுப்புவோம்.

03.          பாலித்தின் பைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்ப்போம். பழைய காலம் மாதிரியே மீண்டும் காகிதப் பைகளில், துணிப்பைகளில் பொருள்களை வாங்குவோம். (மஞ்சள் துணிப்பை கலாச்சாரம் நம் கொங்கு மண்ணுக்கே உரியதுதானே?)

04.          பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகளை உணர்வோம், உணர்த்துவோம்.


     ஒரு வீட்டிற்கு விருந்தினராகச் செல்லும் போது அந்த வீட்டை அலங்கோலப் படுத்தலாமா?  சிறிது காலம் இந்த மண்ணில் விருந்தினராகத் தங்கியுள்ள நாம் இம் மண்ணை மாசுபடுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்திப்போமா?

Saturday 15 November 2014

இடுக்கண் நீக்கிய இணையர்


  மனிதனுக்கு எப்படியெல்லாம் சங்கடம் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. சரியான நேரத்தில் கணவன் மனைவி இருவரும் உதவி செய்ததால் தப்பிததார் அவர்.

  உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்று விளங்கும் வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கும் உரையாற்றச் சென்றபோதுதான் அவருக்கு இந்த சோதனை நிகழ்ந்தது.

   அவர் தெரியாமல் செய்த ஒரு தவறுதான் அதற்கெல்லாம் காரணம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

 ஓர்  ஓட்டுநரை வைத்துக்கொண்டு காலை ஆறு மணிக்குப் புறப்பட்டார். ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலுள்ள முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். கார் நகரைத் தாண்டியதும் எண்பது தொண்ணூறு என்று பறந்ததால், பாதுகாப்புக்காக சீட் பெல்ட்டை இழுத்துப் பொருத்திக்கொண்டார். மூன்று மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் உடுமலைப்பேட்டையை அடைந்தது. சீட் பெல்ட்டை நீக்கிவிட்டு மெல்ல இறங்கினார். அவருடைய நண்பர் வணக்கம் சொல்லி வரவேற்று அதிர்ச்சியுடன் ஏற இறங்கப்பார்த்தார்.

  . நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்த பெல்ட்டை அணிந்ததால், அந்தப் பட்டை அளவுக்கு வெள்ளைச் சட்டையில் குறுக்காக ஒரு கருப்புப்பட்டைப் படிந்திருந்ததைப் பார்த்தபோதுதான் நண்பர் ஏற இறங்க பார்த்ததன் காரணம் புரிந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சஃபாரி சட்டையைத் துவைக்க முடியுமா, காயுமா என்ற சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் நண்பர் சட்டையைக் கழ்ற்றச்சொல்லி, புது சட்டை ஒன்றைக்  கொடுத்தார். அவருடைய துணைவியார் ஓடி வந்து துவைத்துக் காயப்போட்டுவிட்டுச் சுவையான சிற்றுண்டியைப் பரிமாறினார். உடனே விரைந்து சென்று காயாத சட்டையை எடுத்து அயர்ன் செய்துகொடுத்தார். பார்த்தால் அழுக்குப் பட்ட அறிகுறியே தெரியவில்லை. கம்பீரமாக சட்டையை அணிந்துகொண்டு நன்றிகூறி உரிய நேரத்தில் வித்யா நேத்ரா பள்ளிக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார்.

   உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
   இடுக்கண் களைவதாம் நட்பு
 என்ற வள்ளுவர் கூற்றை எண்ணியபடியே அந்த இணையரை நெஞ்சார வாழ்த்தினார். சுஸ்லான் காற்றாலை நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் திரு.பிரேம்குமாரும் அவரது மனைவியும்தான் இங்கே குறிப்பிடப்படும் இடுக்கண் நீக்கிய இணையர்.

  அது சரி. அசடு வழிநத அந்த சஃபாரி சட்டை மனிதர் யார்?
வேறு யார்? நானேதான்.

இந்த நிகழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம்:
 இனி இப்படிச் செல்லும்போது கூடுதலாக ஒரு செட் பேண்ட் சட்டை எடுத்துச்செல்லவேண்டும். அல்லது எவ்வளவு அழுக்குப் பட்டாலும் தெரியாத டார்க் கலர் சஃபாரி அணிந்து செல்ல வேண்டும்.
   



   




Sunday 9 November 2014

அன்பெனும் அமிழ்தம்

                                                                                                         
     அன்பு ஆற்றல் மிக்கது.

          ஒரு பிளவுபட்ட குடும்பம் குழந்தையின் அன்பால் ஒன்று சேர்வது உண்டு

  . காதலனுக்குமண்ணில் மாமாலையும் ஒரு சிறுகடுகாய்தோன்றக் காரணம் காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.

          மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறிகெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

        இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்புக் குலையாமல் இருப்பதற்குக் காரணம் அன்னை பொழியும் அன்பின் வலிமை தான்.

    குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிக்கும் அன்பின் பேராற்றலால்தான்.

   சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப்  பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.  இந்த அன்பு நெறியைத்தான்நின்னோடு ஐவரானோம்என்று குகனையும், ‘நின்னோடு அறுவரானோம்என்று அனுமனையும், ‘நின்னோடு எழுவரானோம்என்று விபீடனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக்காட்டுகிறான். இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தார்  உவகையுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு,  பின்னர்  துன்பப்படுவதுண்டு.

    கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும். மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக்கூடாது. மதத்தின் மீது ப்ற்றுபு இருக்கலாம். அது ஒருபோதும் மதவெறியாக மாறுதல் கூடாது.

    நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும் அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம். செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு என்று கூறுவதைப் போல, அருள் காட்டி ம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும். வள்ளுவர்  கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருக வேண்டும். கணவனின் மனமும் மனைவியின் மனமும் அன்பால் இணைக்கப்பட வேண்டும். மனமுறிவுதான் மணமுறிவுக்குக் காரணம்.

   கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட காட்டத்தான், அன்பு பெருகும். பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வின்பத்தை அனுபவித்தவர்  தாயுமானவர். 
           “அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
           இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமேஎன்று கூறுகிறார்.

        “காக்கை குருவிகள் எங்கள் ஜாதிநீள்
          கடலும் மலையும் எங்கள் கூட்டம்
 என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு  நெக்குருகிப் பாடியவர் வள்ளலார்.

   ஒரு முறை காந்தியடிகளின்  உதவியாளர்  மீராபென் விடுத்த வேண்டுகோளின்படி, ஆசிரமத்தில் வசித்த  இளைஞர்கள் சிலர்  இரவு நேரத்தில் சுந்தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், “மரங்களும் நம்மைப்போல் உயிருடையவை. நம்மைப்போலவே வளர்கின்றன; முகர்கின்றன; உண்கின்றன; பருகுகின்றன; உறங்குகின்றன .அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும் போது தழைகளைப் பறித்தல் தவறுஎன்று கூறினாராம்!

   இன்றைக்குச் ரியாக நூற்றி இருபத்தியோர் ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (9.11.1893)மெரிக்காவில் சிக்காக்கோவில் நடைபெற்ற ர்வமத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.,   ‘மெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளேஎன்று  கூறி உரையைத் தொடங்கியபோது எழுந்த கரவோலி அடங்க பத்து நிமிடம் ஆனதாம்!

      எனவே, நாடு, மொழி, இனம் கடந்து, யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வழியில்.எல்லோரும் நம்  றவினர் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால் உலகில் போர்  ஏது?  பூசல் ஏது?


.     அண்மைக்காலமாக, மனித மனங்கள் மெல்ல மெல்ல பாலைவனங்கள் ஆகிவருகின்றன.  இறைவன் அன்பு மயமானவன். எனவேதான் எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. அன்பெனும் அமிழ் நீர் எல்லோருடைய உள்ளங்களிலும் மீண்டும் பெருக்கெடுக்க  வேண்டும். இதற்கான வழிகளைச் சிந்திப்போம்.

Thursday 6 November 2014

மீண்டும் ஹைக்கூ கவிதைகள்


    என் வலைப்பூவை அடிக்கடி பார்ப்பவர்களில் சிலர் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். யாரும் சிந்திக்காத கோணத்தில் நான் சிந்திப்பதாக பாராட்டுமழை வேறு பொழிந்தனர். அதற்குப்பிறகும் எழுதாமல் இருக்க முடியுமா?
   போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற கண்ணதாசனின் பாடல் பொருளை ஒருமுறை நினைத்துப்பார்த்துவிட்டு எழுதிய கவிதைகளே பின் வருவன. 

என் வலைப்பூவில்
வண்டுகளோடு இப்போது
வாண்டுகளும்.

தொலைபேசியால்
தொலைந்தது
கடிதம் எழுதும் பழக்கம்.

தொலைக்காட்சியால்
தொலைந்தது
படிக்கும் பழக்கம் 


பாருக்குள்ளே நல்ல நாடு
‘குடி மக்கள் பாடுகிறார்கள்
BARக்குள்ளே நல்ல நாடு

இத் தலைமுறை குழந்தைகள்
தொலைத்தது பென்சிலை மட்டுமல்ல
தம் குழந்தைப் பருவத்தையும்.

கே.ஜி முதல் பி.ஜி வரை
வகுப்புகள் நடைபெறும் ஒரே இடம்
தனிப்பயிற்சி மையம்


யாருக்காக அந்தத்
தங்கப் பதக்கம்?
மேற்கு வானில் சூரியன்.

கடன்கொடுத்தவனைப்
பார்க்கப் பிடிக்காமல் நிலா...
அமாவாசை. 

வானம் முழுவதும்
வண்ண மேகங்கள்
விற்காத பஞ்சு மிட்டாய்

பன்னிரண்டில் நாங்கள்
உலர்கிறோம்., நீ மலர்கிறாய்
மாணவரும்  குறிஞ்சிப்பூவும்.

கவிழ்த்துப்போட்ட
வடைச்சட்டியாய்
வானம்.

வானத் தொலைக்காட்சியில்
ஒலியும் ஒளியும்
இடி மின்னல்.

உருக்கிய வெள்ளியை
ஊற்றியது யார்?
மலை அருவி. 

வானத் தொலைக்காட்சியில்
வண்ண விளம்பரம்
வானவில்.

வருண பகவானின் கோலிக்குண்டுகள்
தரைமீது தவறி விழுந்தன
ஆலங்கட்டி மழை.

குவியாடியில்
உலகமே தெரிகிறது
புல்லின்மேல் பனித்துளி.

சோறு போடும் ஆறு- அதைக்
கூறு போடுவது யாரு?
மனிதன்.

விடிய விடிய
வெல்டிங் வேலையில் வருணன்
மின்னல். 

மலைமுகட்டில் மட்டும் வெயில்
வீடியோ எடுக்கிறானோ
இறைவன்.

குளத்து நீரில்
மிதக்கும் விளக்கு
நிலா.

பூமித்தாய்
நெருப்பைத் துப்புகிறாள்
எரிமலையாய்.

எந்தக் குழந்தை
பூமி கிலுகிலுப்பையை ஆட்டுவது?
நில நடுக்கம்.

ஒதாமல் ஒருநாளும்
இருக்க வேண்டா
பிளஸ் டூ மாணவன். 

கோழி போட்டால் பணம்
மாணவன் போட்டால் ரணம்
நாமக்கல்லில் முட்டை.

இளமையில் கல்
இல்லை இல்லை
இளமையில் நாமக்கல்

பள்ளி மாணவனும்
பண்ணைக்கோழியும் ஒன்றுதான்
நாமக்கல்லில்

குன்றின் மேல் இட்ட
வெண் துப்பட்டா
அருவி.

முதல்நாள் மிடுக்கு நடை
மறுநாள் கடைக்கு எடை
செய்தித்தாள்.