Tuesday 30 December 2014

என்னினும் என்மகள் அறிவுடையாள்

அன்பு மகள் அருணாவுக்கு,

   வாழ்க வளமுடன். இங்கு நானும் அம்மாவும் தங்கையும் நலமாக உள்ளோம். அங்கு நீயும் மாப்பிள்ளையும் நலமா?

   தொலைப்பேசி புழக்கத்தில் வந்ததால் கடிதம் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. நீ திருச்சியில் பொறியியல் கல்லூரியில் படித்தபோது நான் உனக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருதேன். அதற்குப் பிறகு இப்போதுதான் உனக்குக் கடிதம் எழுதுகிறேன்
.
    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்னும் குறள்பா ஏனோ என் சிந்தனையில் இன்று சுற்றிச் சுற்றி வந்தது.
தம்மினும் தம்மக்கள் அறிவுடையார் என்பதில்தான் பெற்றோருக்குப் பெருமை. அந்தப் பெருமையை அளித்த உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    என்னைவிட நீ அறிவுடையவள் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. என்றாலும் நீ இக்கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாய்.

   நான் திருச்சி வானொலியில் பேசினேன்; நீயோ மிஸிஸிப்பி வானொலியில் பேசினாய். நான் உள்ளூர் பத்திரிகையில் எழுதினால், நீ உலக அளவில் புகழ் பெற்ற பத்திரிகைளில் எழுதுகிறாய். நான் பள்ளிக்குழந்தைகளுக்குப் பாடம் நடத்தினால், நீ பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறாய். நான் நம் தாய்மொழியில் கட்டுரை எழுதினால், நீ அன்னிய மொழியில் சிலம்பம் ஆடுகிறாய்.

     நான் நாடளவில் புகழ்பெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்தேன். நீ உலகப்புகழ் பெற்ற டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெறப்போகிறாய். என் ஆய்வு ஊரளவில் பேசப்படுகிறது; உனது ஆய்வு உலக அளவில் பேசப்படும் நாள் வரத்தான் போகிறது. இவ்வளவு ஏன்?  23 வயதில் சென்னைக்குக்கூட தனியாக செல்வது பற்றி யோசிப்பேன். ஆனால் நீயோ அந்த வயதில் தனியாக மிஸிஸிப்பிக்குப் பறந்து சென்றாய்.

          நான் ஆசிரியப்பணியேற்று பள்ளிக்கு சைக்கிளில் போன வயதில், இன்று நீ பல்கலைக்கழகத்திற்கு காரில்- அதுவும் நீயே ஓட்டிச்செல்கிறாய். அதனால்தான் சொல்கிறேன் நீ என்னினும் அறிவுடையவள் என்று. ஆற்றலில் குருவை மிஞ்சிய சிஷ்யனால் குருவுக்கு மகிழ்ச்சி. அறிவில் நீ தந்தையை மிஞ்சியவள் என்பதால் எனக்கு மகிழ்ச்சி.

     தேர்ந்தெடுத்த உயிரி தொழில்நுட்பத்துறையில் நீ சிறந்து விளங்குவதற்குக் காரணம்,  எனது கருத்தை எனது ஆசையை உன்னிடத்தில் திணிக்காமல் உனக்கு ஆர்வமுடைய படிப்பைத் தொடர அனுமத்தித்தது என நினைக்கிறேன்.

   இன்னொரு காரணமும் உண்டு. எந்தப் பணியை மேற்கொண்டாலும் அதில் 100 விழுக்காடு ஈடுபாட்டுடன் செயல்படுவது உனது இயல்பாகும். பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கலைக்கல்லூரியில் நீ உதவிப்பேராசிரியையாகச் சிறிதுகாலம் பணியாற்றியபோது உன் மாணவர்கள் கொடுத்தப் பின்னூட்டங்களே அதற்குச் சான்றாகும்.

    உனது முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருப்பவர் உன் அன்புக் கணவர். பொன் அணிகளை எதிர்பார்க்காமல் உன் அணிகளை (பணிவும் இன்சொல்லும்) கணக்கில் எடுத்துக்கொண்டு உன் கரம் பற்றிய எங்கள் மாப்பிள்ளை உண்மையில் பாராட்டுக்குரியவர்.

     இப்படியே நீ இருந்துவிடப் போவதில்லை. மேலும் உன் நிலை உயரும். செல்வாக்குப் பெருகும்; செல்வம் பெருகும். அப்போதும் எப்போதும்போல் பணிவாக இரு. பெருக்கத்து வேண்டும் பணிவு என்று வள்ளுவர் கூறுவதை என்றும் நினைவில் கொள்.

    இன்று டிசம்பர் 30. உன் பிறந்த நாள். உன் அம்மாவுக்கும் எனக்கும் இன்றுதான் பிறந்த நாள். வியப்பாக இருக்கிறதா? அம்மாவாக அப்பாவாக நாங்கள் ஆனதே நீ பிறந்த நாளன்றுதானே!

  அருமை மகளே! அமிழ்தினும் இனியவளே! உனக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தற்காத்துத் தற்கொண்டார்ப் பேணி தகை சான்ற சொற்காத்துச் சோர்வில்லாமல் வாழ்வதே குறள் காட்டும் நெறியாகும். அந்நெறியில் வழுவாது வாழ்க; வளர்க.

உன் அன்புத் தங்கையும் இனிய பிறந்த நாள் வாழ்த்தைக் கூறுகிறாள்.

என்றும் மாறாத அன்புடன்,
உன் அப்பா.





Wednesday 24 December 2014

மனிதநேயமற்ற மருத்துவமனைகள்

        நம் நாட்டில் தன்வந்திரி மருத்துவக் கடவுளாக வணங்கப்படுகிறார். ஆனால் ஆங்கில மருத்துவம் கற்றவர்களுக்கு  கிரேக்கக் கடவுளான அப்பலோ தான் மருத்துவக் கடவுள். அந்த அப்பலோவின் பெயராலே இயங்கும் மருத்துவ மனையில் மனிதநேயமற்ற நடைமுறை இருப்பதுதான் வியப்பாக உள்ளது.

    என்னுடன் பணியாற்றும் ஆசிரியருக்கு அண்மையில் பெண்குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியைக் கூட பகிர்த்து கொள்ள முடியாத வகையில் பிறந்த சில மணி நேரத்தில் குழந்தைக்குப் பிரச்சனை ஏற்பட்டது. பனிக்குட நீர் குழந்தையின் வயிற்றில் புகுந்து, தொற்று ஏற்பட்டதால் வந்த பிரச்சனையாம். தொற்று காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறல் குழந்தையைத் திக்குமுக்காடச் செய்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் அப்பலோவிற்கு கைகாட்டிவிட்டார். குழந்தை பிழைத்தால் போதும் என்று நினைத்த பெற்றோர் அவசர அவசரமாக அப்பலோவில் சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மூக்கின் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தினர்.  அம்மாவைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை. ஆட்டோ மீட்டர் போல முதலில் குறைவான செலவே ஆகும் என்றனர்., பிறகு இருபதாயிரம் ஆகும் என்றனர். குழந்தையின் உடல்நிலையிலும் குறிப்பிடும்படி முன்னேற்றம் இல்லை. அடுத்த இரு நாள்களில் கட்டணம் ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியர் தடுமாறிப் போய்விட்டார். குழந்தையின் உடல்நிலையிலும் முன்னேற்றம் இல்லை. ஆறாம் நாளில் மருத்துவக் கட்டணம் எண்பதாயிரத்தைத் தொட்டது. மருந்து மாத்திரை செலவுகள் தனி. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். குழந்தையின் நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டனர். பத்துநாள் ஆகலாம்., சிலசமயம் ஒரு மாதமும் ஆகலாம் என்றபோது அதிர்ந்தனர். உறவு முறைகளுடன் கலந்து ஆலோசித்தபின் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர்.
     மருத்துவ மனை ஊழியர்கள் ரூபாய் எண்பத்து ஐந்து ஆயிரம் கட்டச் சொன்னார்கள். சில சிபாரிசுகளைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி ரூபாய் அறுபத்து இரண்டாயிரம் கட்டி விட்டு, குழந்தையை அழைத்துச் சென்று திருச்சி அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்தனர். நோய்க்குறிப்பேட்டைப் பார்த்த அரசு மருத்துவர் அதைப் பொருட்படுத்தாமல்   சிகிச்சையைத் தொடங்கினார். மூன்று மணி நேரத்தில் குழந்தையின் உடல்நலம் சீரடையத் தொடங்கியது.

    இப்போது குழந்தை பூரண நலம்பெற்று தாய்ப்பால் அருந்தத் தொடங்கிவிட்டது.

    இந்தப் பெற்றோர் அப்பலோ மருத்துவர்களிடம் பணத்தைமட்டுமா இழந்தனர்., நம்பிக்கையையும் இழந்தனர்.

        ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மருத்துவர்களில் சிலர் திறமையும் இல்லாமல், தொழில் தர்மமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது. என்ன செய்வது? எல்லாம் காலத்தின் கோலம்
.

 மருத்துவ மனைகள் கார்ப்பொரேட் நிறுவனங்களாக மாறும்போது குப்பனுக்கும் சுப்பனுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்காது என்பது கசப்பான உண்மை.

Wednesday 17 December 2014

நம்பிக்கைதான் அனைத்துயிர்களுக்கும் மூலாதாரம்.

    இம்மாதம்(டிசம்பர் 14) வெற்றிமுனை என்னும் சிற்றிதழில் வெளியான நம்பிக்கை பற்றிய ஏடு இட்டோர் இயல்(editorial) கட்டுரை சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதை எழுதியவர் அவ்விதழின் முதன்மை ஆசிரியர் நீதிபதி மூ.புகழேந்தி அவர்கள்.

  குடும்ப பந்தமே நம்பிக்கையில்தான் ஆரம்பிக்கிறது என்பது அவர் எழுதியுள்ள வைர வரியாகும். இதை ஆங்கிலத்தில் nuptial loyalty என்பார்கள். இந்த நம்பிக்கை உடன்படிக்கையை கணவனும் மனைவியும் மணநாள் தொடங்கி மரிக்கும் நாள்வரையிலும் மீறுதல்கூடாது. காதலித்துத் திருமணம் செய்தோர் கூட நாளடைவில் ஒருவர்க்கொருவர் நம்பிக்கையை இழந்து விடுகின்றனர். முதலில் நம் தமிழ்நாட்டு இளஞர்களும் இளம்பெண்களும் பாரதிதாசனின் குடும்ப விளக்கை, அதில் வரும் முதியோர் காதலை ஊன்றிப் படிக்கவேண்டும்.

     ஒரு நோயாளி தன் மருத்துவரிட்த்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அவருடைய நோய் குணமாகாது. அவசரமாக ஒரு கால்டாக்சியைப் பிடித்துப் பயணம் செய்கிறோம். முன்பின் தெரியாத அந்த ஓட்டுநரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்காக எல்லோரையும் நம்புதலும் அறிவுடமை ஆகாது. ஒரு பெண் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநரை நம்பி பயணம் செய்தல் முட்டாள்தனமான செயலாகும். அந்நேரத்தில் துணையுடன் சென்றாலும் ஆபத்துதான். காதலன் துணையிருந்தும் நிர்பயா கயவர்களின் பிடியிலிருந்து தப்பமுடியவில்லையே.

  விஷமற்றப் பாம்பு தீண்டியவன் இறந்து விடுகிறானே ஏன்? பிழைக்க முடியும் என்னும் நம்பிக்கையை இழப்பதால்தான். விஷப்பாம்பு தீண்டியவன் பிழைத்து விடுகிறானே ஏன்? உறுதியாகப் பிழைக்கமுடியும் என நம்புவதால்தான்.

   இருபது வருடங்களுக்குமுன் நடந்தது உண்மையாக., ஆனால் நம்பமாட்டீர்கள். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்குப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். மூவர் அமரும் இருக்கையில் ஒரு முதியவரும் ஒரு கோட்டு போட்டவரும் என்னுடன் பயணித்தனர். பேச்சுவாக்கில் தெரிந்தது, கோட்டு போட்டவர் ஒரு டாக்டர் என்று. கொஞ்சநேரத்தில் அந்த முதியவர் தலைவலியால் துடித்தார். டாக்டர் உடனே தன் கோட்டில் கையைவிட்டு எதையோ எடுத்தார். “ இந்தாங்க, இந்த மாத்திரையை வாயில் போட்டு சப்புங்க., முழிங்கிடாதிங்க என்று சொல்லியபடி கொடுத்தார். அடுத்த பத்து நிமிடங்களில் தலைவலி போன இடம் தெரியவில்லை. எஞ்சியிருந்த மாத்திரையை வெளியில் துப்பிவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டார். மேட்டுப்பாளையத்தில் இறங்கும் சமயத்தில் “டாக்டர், அந்த மாத்திரையின் ப்ராண்ட் நேம் என்ன? என்று கேட்டேன். “மாத்திரையா... அது என் கோட்டில் இருந்த பட்டன்! என்றார்.

    இது அண்மையில் நடந்தது. இதையும் நம்பமாட்டீர்கள். நம்பினால்- இறைவனை நம்பினால்- இறைவனை முழுமையாக நம்பினால் நல்லதே நடக்கும் என்பதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.

 சென்ற வாரம் நான் பணியாற்றும் பள்ளியில் ஒரு மாணவன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். கரூரில் மருத்துவர் உட்பட அனைவரும் நம்பிக்கை இழந்தனர்., நான் இழக்கவில்லை. உடனே கால தாமதமின்றி கோவை கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிரசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். இப்போது அவன் பிழைத்துக் கொண்டான். அவன் விரைவில் உடல்நலம் பெற்றுப் பள்ளிக்குத் திரும்பி ஓடியாடி விளையாட இறைவன் அருள்புரிய வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை செய்தோம்.

 ஐந்தே நாள்களில் வீடு திரும்பிவிட்டான். when prayers go up blessings come down என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

    எனவே நம்பிக்கைதான் அனைத்துயிர்களுக்கும் மூலாதாரம்.

                          


Thursday 11 December 2014

கல்வி என்னும் கவசம்

  காலையில் எழுந்தவுடன் குறுஞ்செய்தியோ அழைப்போ வந்துள்ளதா எனப் பார்த்தபோது அந்த அதிர்ச்சித் தகவல் என்னை ஒருகணம் உலுக்கிவிட்டது.

  My dear husband demised due to septic shock என்று அவர் நள்ளிரவில் அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்குள் பொதிந்து கிடந்த சோகத்தை என்னால் எளிதில் உணர முடிந்தது. Shocked ., it is irreparable loss., let the Almighty give you the strength to overcome the crisis என்று மறுமொழியாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுப் பல்துலக்கச்சென்றேன். பின்னர் எழுந்து வந்த மனைவியிடமும் செய்தியைப் பகிர்ந்து கொண்டேன்., அவளும் வருந்தினாள்.

   இரண்டு தினங்களுக்கு முன் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தன் கணவருக்கு மிகவும் முடியவில்லை என்றும், கரூர் மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால்,பாண்டிச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்போவதாகவும் தெரிவித்தார். அவ்வாறே சேர்த்தார். ஆனால் பயனில்லாமல் போய்விட்டது.

    அவருடைய மகள் ஹரிணி நான் முதல்வராகப் பணியாற்றும் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படிக்கிறாள். மறைவுச் செய்தி கிடைத்த அன்று, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து இரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினோம்.

   இரண்டு வாரம் கழித்து ஹரிணி பள்ளிக்குத் திரும்பினாள். அவளை அழைத்துப் பேசி ஆறுதல் சொன்னேன். அன்று மாலையில் அவளுடைய அம்மா திருமதி சுபப்பிரதா அவர்களைச் சந்தித்து இரங்கலைத் தெரிவித்தேன்.அவர் கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். ஆங்கில மொழியில் அபாரமானப் புலமை உடையவர். முன்னொருமுறை அவரை அழைத்து ஆங்கில இலக்கிய மன்றக் கூட்டத்தில் பேசச் செய்தேன். எப்போதும் என்னிடத்தில் அன்பும் மதிப்பும் உடையவர்.    சற்றுநேரம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

    அவரது கணவர் எம்.எஸ்ஸி படித்தவர்., பிரபல மருந்து கம்பெனியில் பணிபுரிந்தவர். ஆனால் விழிப்புணர்வு இல்லாத மனிதராய் இருந்திருக்கிறார். எதனாலோ எப்போதோ காலில் ஏற்பட்ட ஒரு புண்., மருத்துவர் ஆலோசனையின்றி சில மருந்துகளை  அவர்  தொடர்ந்து எடுத்துக்கொண்டுள்ளார் .மாமனார் சொல்லியும் கேட்கவில்லை., மனைவியிடமும் தன் உடல்நிலை குறித்துச் சரியாக பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.  கடைசியில் அந்த ஆறாத புண்தான் அவருக்கு எமனாக அமைந்து விட்டது. அந்தப் புண்ணிலிருந்து பெருகிய நச்சுக்கிருமிகள் இரத்த ஓட்டத்தில் கலந்து முக்கிய உறுப்புகளைச் செயலிழக்கச் செய்துவிட்டன. அதன் விளைவாக முதலில் மூளைச்சாவும் அடுத்த ஒருமணி நேரத்தில் சாவும் நேர்ந்துவிட்டது. அந்த சோகத்திலும் அவருடைய மனைவி ஒரு முக்கிய முடிவெடுத்தார். தலைமை மருத்துவரைச் சந்தித்து உரிய படிவங்களில் கையெழுத்துப் போட்டவுடன் இரண்டு விழிகளையும் அகற்றி மருத்துவர்கள் பத்திரப்படுத்தினர். இதனால் இரண்டு பேர்களுக்குப் பார்வை கிடைத்தது.

 இப்படித் தெளிவாகச் சிந்தித்துச் செயல்பட்டதற்குக் காரணம் அப்பெண்மணி கற்ற கல்விதான். ஈடுசெய்ய முடியாத இழப்புதான் என்றாலும், பொருளாதாரச் சிக்கலின்றி தொடர்ந்து நன்றாக வாழ்வதற்கும் துணை புரிவது அவர் கற்ற கல்விதான்.

   இப்போது கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்பை நிறைவு செய்து, வாய்மொழித் தேர்வை எதிர்பார்த்து இருக்கிறார். டாக்டர் பட்டம் கிடைக்கப்பெற்றவுடன் பல்கலைக்கழகத்தில் பணிசெய்யும் பேறு கூட வாய்க்கலாம்.

    ஆக, பெண்களுக்குக் கவசமாகத் திகழ்வது கல்வியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

  இந்தச் சோக நிகழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவாம்.

·         நாற்பது வயதைக் கடந்த எவரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

·         தன் உடலில் உள்ள நோய்கள் குறித்து மனைவியிடம்/கணவரிடம்/பெற்ற பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசவேண்டும்.

·         மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. ஒருவர் உட்கொள்ளும் மருந்து மற்றவருக்குப் பொருந்தாது.

·         முதலில் நாட்டு மருத்துவம் செய்து, பின்னர் அலோபதி மருத்துவரிடம் செல்லக்கூடாது.

·         உடல்நலத்திற்கு எதிரான எந்தப்பழக்கத்தையும் ஓயாத உழைப்பு உட்பட கைக்கொள்ளல் ஆகாது.

       அடிப்படையில் நான் ஓர் ஆசிரியன். அதனால்தான் அடிக்கடி பாடம் நடத்தத் தொடங்கிவிடுகிறேன்.




 
  
  
   



Saturday 6 December 2014

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

     கூட்டுக் குடும்பம் சிதைந்துபோய் இன்று தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. மேலும் தனிக்குடும்பங்கள் தங்கும் விடுதிகளாக மாறிவிட்டன. குடும்ப உறுப்பினர்கள் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சேர்ந்து வாழ்கின்றனர். பணம், புகழ், கெளரவம் இவற்றுக்காக அலையும் பெற்றோர்களிடம் குழந்தைகள் அன்புக்காக ஏங்கித் தவிக்கின்றன. 

     முன்பெல்லாம் குழந்தைகள் மூன்று வயது வரை அம்மாவின் முலைப்பாலை அருந்தும்.  ஐந்து வயது வரை அம்மா அப்பாவைச்  சுற்றிவரும்.  ஐந்து வயதில்தான் பள்ளியில் போடுவார்கள். இப்போது அப்படியா? பிறந்து மூன்று மாதங்கள் கூட தாய்ப்பால் கிடைப்பதில்லை. கிடைக்கும்., ஆனால் கொடுப்பதில்லை.,  அழகு கெட்டுவிடுமாம்!

      ஆறுமாதங்கள் ஆன குழந்தையைக் காப்பகத்தில் விட்டுவிட்டுப் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய்விடுகிறார்கள். மாலை ஆறு மணிக்குமேல் அழைத்து வரும் குழந்தையைத் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் உட்காரவைத்து, கடையில் வாங்கிவந்த நொறுக்குத் தீனியைக் கொடுத்துவிட்டுத் தாய் தனது வேலையைப் பார்ப்பாள். இரண்டு வயது ஆன உடனே பள்ளியில் சேர்த்துவிடுவார்கள். அங்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த நேரம் போக மீதி நேரங்களில் குழந்தைகளை வாய்ப்பொத்தி உட்காரவைத்துவிடுவார்.

                 காலையில் கைது
                 மாலையில் விடுதலை
                 மழலையர் பள்ளி

   என்று நான் முன்பு எழுதிய ஹைக்கூ இப்போது நினைவில் வந்து தொலைக்கிறது.

   இந்த இயந்திர கதி வாழ்க்கையில் பல நாள்களில் குழந்தை அப்பாவை பார்க்க முடியாமலும் போகும். காலையில் எழுவதற்குமுன் வேலைக்குப் போய்விடுவார். இரவில் வீடு திரும்பும் போது குழந்தை தூங்கிவிடும்.

   இப்படியே ஆண்டுகள் உருண்டோடும். நெடுநெடுவென வளர்ந்து நிற்பாள். அவள் வாங்கவேண்டிய மதிப்பெண்ணில்தான் பெற்றோர் குறியாக இருப்பார்கள். அவளுடைய உணர்வுகளை ஒருநாளும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

   “அப்பா! உங்கள் ஒருநாள் சம்பளம் எவ்வளவு? என்று கேட்டாள். ஏதோ நினைப்பில் “எண்ணூறு ரூபாய் என்றார். உள்ளே ஓடிப்போய் தன் உண்டியலைக் கொண்டுவந்து கவிழ்த்தாள். “அப்பா, இதில் ஆயிரம் ரூபய் இருக்கிறது. என்னோடு ஒருநாள் முழுவதும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கப்பா.  என்று ம்ன்றாடினாள். அவருக்குத் தன் பின்மண்டையில் யாரோ ஓங்கி அடித்தது போலிருந்தது. பெற்ற மகளிடம் அன்பு காட்டாத பாவி என்பதை உணர்த்திவிட்டாளே.

    கணக்குப் பாடத்தில் 98 மதிப்பெண் பெற்றபோது இரண்டு மதிப்பெண்ணை கோட்டை விட்டதற்காக அவளுடைய அம்மா காலில் சூடு வைத்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கொடூர அப்பாதானே அவர்.

   “ அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 
    அம்மை அப்பா இனி ஆற்றேன்

 என்று வள்ளலார் கூறுவார். இன்று அன்புக்காக ஏங்கும் ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரைப் பார்த்து இப்படித்தான் கூறுகிறது.

   இந்தக் காலத்துப் பெற்றோர்கள் புரிந்து கொள்வார்களா?

   அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
   புன்கணீர் பூசல் தரும்

என்ற குறள் பொய்யாகிவிடுமோ?




Wednesday 3 December 2014

மதிப்பில்லாத மதிப்பெண்கள்



    நான் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதினேன். ஒரே நாளில் இரு தேர்வுகள். தொடர்ந்து நான்கே நாள்களில் எழுதி முடிக்கும் வகையில் அட்டவணை இருந்தது. தேர்வு பயம் ஏதுமின்றி எழுதியதை நினைத்துப்பார்க்கிறேன். பள்ளியில் நடந்த விழா, போட்டி, விளையாட்டு மற்றும் சாரணர் படை என எல்லாவற்றிலும் பங்கேற்றேன். நண்பர்களுடன் அரட்டைக்கச்சேரி வேறு. நா.பா., மு.வ., நூல்களைப் படிக்கவும் நேரம் இருந்தது. உண்மையில் அது ஒரு பொற்காலம்.

      இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.   இன்றைக்குப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பள்ளியில், விடுதியில், வீட்டில் எங்கும் ஓர் இனம்புரியாத இறுக்கமான சூழ்நிலையே நிலவுகிறது. மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாகத்தான் பார்க்கிறோம்.   மதிப்பே இல்லாத மதிப்பெண்கள்! 1180 மதிப்பெண் பெற்றாலும் விரும்பிய படிப்பில் சேர முடிவதில்லை.

    ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துகின்றனர்.. பதினோராம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துகின்றனர்.

.   சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொடுக்காமல் பைக் ஓட்டக் கற்றுக்கொடுப்பது அறிவார்ந்த செயல் ஆகுமா? இதுவும் மாணவர்கள் மீது நடத்தப்படும் ஒருவகை வன்முறைதான்
.
    அரசு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் நடத்துவதும் வன்முறைதான்.

    பொதுவாக, பள்ளிகளில் மாலையில் பள்ளி முடிந்ததும் ஆடிடத்தில் விளையாடுவோரைத் தவிர அனைவரும் சென்றுவிடுவார்கள். இப்போது அப்படியில்லை. நள்ளிரவு வரையில் பள்ளியில் வகுப்பறைகளில் விளக்குகள் எரிகின்றன். ஒருமுறை சேலத்திலிருந்து நாமக்கல்வரை இரவு பத்து மணிக்குமேல் பேருந்தில் பயணம் செய்து, நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பள்ளிகளைப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று உணர்வீர்கள். இதுவும் ஒருவகை வன்முறைதான்.

    விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசமானது. சிறுநீர் கழிப்பதற்குக் கூட அனுமதி தராமல், மணிக் கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கச் செய்வது , ஒரே நாளில் மூன்று தேர்வுகளை நடத்துவது,முந்தைய தேர்வைவிட நான்கு மதிப்பெண் குறைந்தாலும் நையப் புடைப்பது,. என்ன கொடுமை இது?         பண்ணைக் கோழிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
   
    இது இப்படி என்றால், வீட்டுச்சூழல் இன்னும் மோசம்.காலை நான்கு மணிக்கு எழுப்பி தனிப்பயிற்சிக்கு அனுப்புவதில் குறியாக இருப்பார்கள். காலை எட்டு மணிக்கு வீடு திரும்பி, நீராடி, சீருடை அணிந்து, அரைகுறையாக உணவருந்திப் பள்ளிக்குப் புறப்படுவார்கள். இதுதான் கொடூரமான வன்முறை.

    பெற்றோர் சிலர் தம்முடைய நிறைவேறாத ஆசைகளைத் தம் மகன் மகள் மீது திணிப்பர். தான் மருத்துவப்படிப்பில் சேர நினைத்தது நிறைவேறவில்லை. இப்போது தன் மகன் மருத்துவப்படிப்பில் சேர்ந்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு அவனைப் போட்டு வாட்டுகிறார். இதுதான் மிகப்பெரிய வன்முறை.

    சிலர் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு படிக்கும் மகனுடன் மல்லுக்கு நிற்பார்கள். திருப்புத் தேர்வில் கணிதத்தில் 199 மதிப்பெண் வாங்கினால், ஒரு மதிப்பெண் ஏன் குறைந்தது என்று கூண்டில் ஏற்றிக்  குறுக்கு விசாரணை செய்யத்  தொடங்கி விடுவார்கள். இந்தக் குறைகாணும் போக்கு குழந்தைகளிடத்தில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

     எப்போதோ வாங்கிய குறைந்த மதிப்பெண்ணைத்  தற்போது சுட்டிக் காட்டி ர்ச்சனை செய்வர். இப்படி மதிப்பெண் வாங்கினால் தோட்டி வேலைக்குக் கூட செல்லமாட்டாய் என்று பேசி அந்த அருமையான தொழிலின் புனிதத்துவத்தையும் கெடுத்து, பையனின் படிக்கும் ர்வத்தையும் கெடுத்து விடுவார்கள். “உன் அண்ணன் கணக்கில் சென்ட்டம் வாங்கினான். அவன் எங்கே நீ எங்கேஎன்று ஒப்பிட்டுப் பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலையும் செய்வார்கள்.

     ஒப்பிட்டுப் பேசுவதை பெற்றோர் நிறுத்தினால் , ஒபாமா அளவுக்கு அவர்களுடைய குழந்தைகள் வாழ்வார்கள்., நிறுத்தாவிட்டால் ஒசாமா அளவுக்கு வீழ்வார்கள். பெற்றோர்களில் பலருக்கு இது தெரிவதில்லை.

    மேனிலைக்கல்வி தொடங்கப்பட்ட காலத்தில், அதாவது எண்பதுகளில், ஒரு பள்ளியில் 80% தேர்ச்சி என்றால் அது பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. ஒரு மாணவன் ஒரு பாடத்தில் 90% மதிப்பெண் பெற்றால் அதைச் சாதனை என்றார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பள்ளி, ஆசிரியர், பெற்றோர் அனைவரது எதிர்பார்ப்பும் சென்ட்டம்...சென்ட்டம் என மாறிவிட்டது.! இது ஒரு நோயாகப் பரவிவிட்டது. இந்தப் புதுவகை மனநோய்க்கு Centum syndrome என்று பெயர் சூட்டியுள்ளேன்.

    மாணவருடைய அறிவுத் திறனையும், அடைவுத் திறனையும் பார்க்காமல், உயர்ந்த மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்று பெறறோர், ஆசிரியர், உறவினர் அனைவரும் ஏற்றும் சுமையை சுமக்க முடியாமல் திணறும் அவலம் எங்கும் அரங்கேறிக் கொண்டுள்ளது. வினா விடைகளைக் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வில் அப்படியே எழுதுவதற்குத் தீவிரப்பயிற்சி அளிக்கின்றனர். சொல்லப் போனால், ஆங்கிலப் பாடல்களை அப்படியே ஒப்பிக்கும் மழலையர் வகுப்புக் குழந்தைக்கும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவன் என்ன ஒப்பிக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. இவன் என்ன எழுதுகிறான் என்று இவனுக்குத் தெரியாது. குருட்டு மனப்பாடம் செய்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதால் என்ன பயன் விளையும்?  இந்த நிலை தொடர்ந்தால் ஆய்வுக் கட்டுரை எழுதுதல், நூல் எழுதுதல்,  நோபல் பரிசு பெறுதல் என்பதெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெறும்  கானல் நீராகி விடும்
.
   தேனீக்கள் மலருக்கு வலிக்காமல் தேனை எடுப்பதுபோல் குழந்தைகளிடத்தில் வன்முறை நடத்தாமல் வேலைவாங்க வேண்டும்பொன்முட்டை போடும் வாத்தை , நிறைய முட்டை கிடைக்கும் என அதன் வயிற்றை அறுத்துப்பார்த்தானாம் பேராசைக்காரன் ஒருவன். இந்தப் பேராசைக்காரனின் உருவில்தான் பல பெற்றோர்கள் உள்ளனர்., பல பள்ளிகள் உள்ளன.

   படிப்பது சுகம் என்ற நிலைமாறி, படிப்பது சுமை என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் மன அழுத்தம் காரணமாக எடுக்கக்கூடாத முடிவையும் எடுத்துவிடுகின்றனர்.படிப்பது சுகம், படித்ததைத் தேர்வில் எழுதுவது அதைவிட சுகம் என்று  குழந்தைகள் நினைக்கும் காலம் மீண்டும் வருமா?

    படிப்பதில் மகிழ்ச்சிகொள்., தேர்வுகளைக் கொண்டாடு., தேர்வுகளில் விடை எழுதுவது இனிய அனுபவமாக அமையட்டும் என்று இறையன்பு அவர்கள் கூறுவார். அந்த  வகையில் பள்ளிச்சூழல், வீட்டுச்சூழல், தமிழ் நாட்டுச்சூழல் அமைந்தால்தான் மனவளம் மிகுந்த குடிமக்கள் உருவாவார்கள்.

  இச் சிக்கலுக்குத் தீர்வு எதேனும் உண்டா?  உண்டு.

அரசு ஓர் அவசர சட்டத்தின் மூலம் தனிப்பயிற்சியை ஒழிக்க வேண்டும்.

பதினோராம் வகுப்பில் அதற்குரிய பாடத்திட்டத்தில் 600 மதிபெண்களுக்குத் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 600 மதிப்பெண்களுக்குப் பொதுத்தேர்வை நடத்த வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு விடுமுறை நாள்களிலும் வகுப்புகள் நடப்பதைத் தடுக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும்.

குருட்டு மனப்பாடம் செய்யாமல் சிந்தித்து விடை எழுதும் வகையில் தேர்வு வினாத்தாள் அமைய வேண்டும்.

மேனிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாரம் இரு பிரிவேளைகள் விளையாட்டும், ஒரு பிரிவேளை நன்னெறிக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  இது குறித்து, சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கலாமே.