Wednesday 17 December 2014

நம்பிக்கைதான் அனைத்துயிர்களுக்கும் மூலாதாரம்.

    இம்மாதம்(டிசம்பர் 14) வெற்றிமுனை என்னும் சிற்றிதழில் வெளியான நம்பிக்கை பற்றிய ஏடு இட்டோர் இயல்(editorial) கட்டுரை சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதை எழுதியவர் அவ்விதழின் முதன்மை ஆசிரியர் நீதிபதி மூ.புகழேந்தி அவர்கள்.

  குடும்ப பந்தமே நம்பிக்கையில்தான் ஆரம்பிக்கிறது என்பது அவர் எழுதியுள்ள வைர வரியாகும். இதை ஆங்கிலத்தில் nuptial loyalty என்பார்கள். இந்த நம்பிக்கை உடன்படிக்கையை கணவனும் மனைவியும் மணநாள் தொடங்கி மரிக்கும் நாள்வரையிலும் மீறுதல்கூடாது. காதலித்துத் திருமணம் செய்தோர் கூட நாளடைவில் ஒருவர்க்கொருவர் நம்பிக்கையை இழந்து விடுகின்றனர். முதலில் நம் தமிழ்நாட்டு இளஞர்களும் இளம்பெண்களும் பாரதிதாசனின் குடும்ப விளக்கை, அதில் வரும் முதியோர் காதலை ஊன்றிப் படிக்கவேண்டும்.

     ஒரு நோயாளி தன் மருத்துவரிட்த்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அவருடைய நோய் குணமாகாது. அவசரமாக ஒரு கால்டாக்சியைப் பிடித்துப் பயணம் செய்கிறோம். முன்பின் தெரியாத அந்த ஓட்டுநரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்காக எல்லோரையும் நம்புதலும் அறிவுடமை ஆகாது. ஒரு பெண் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநரை நம்பி பயணம் செய்தல் முட்டாள்தனமான செயலாகும். அந்நேரத்தில் துணையுடன் சென்றாலும் ஆபத்துதான். காதலன் துணையிருந்தும் நிர்பயா கயவர்களின் பிடியிலிருந்து தப்பமுடியவில்லையே.

  விஷமற்றப் பாம்பு தீண்டியவன் இறந்து விடுகிறானே ஏன்? பிழைக்க முடியும் என்னும் நம்பிக்கையை இழப்பதால்தான். விஷப்பாம்பு தீண்டியவன் பிழைத்து விடுகிறானே ஏன்? உறுதியாகப் பிழைக்கமுடியும் என நம்புவதால்தான்.

   இருபது வருடங்களுக்குமுன் நடந்தது உண்மையாக., ஆனால் நம்பமாட்டீர்கள். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்குப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். மூவர் அமரும் இருக்கையில் ஒரு முதியவரும் ஒரு கோட்டு போட்டவரும் என்னுடன் பயணித்தனர். பேச்சுவாக்கில் தெரிந்தது, கோட்டு போட்டவர் ஒரு டாக்டர் என்று. கொஞ்சநேரத்தில் அந்த முதியவர் தலைவலியால் துடித்தார். டாக்டர் உடனே தன் கோட்டில் கையைவிட்டு எதையோ எடுத்தார். “ இந்தாங்க, இந்த மாத்திரையை வாயில் போட்டு சப்புங்க., முழிங்கிடாதிங்க என்று சொல்லியபடி கொடுத்தார். அடுத்த பத்து நிமிடங்களில் தலைவலி போன இடம் தெரியவில்லை. எஞ்சியிருந்த மாத்திரையை வெளியில் துப்பிவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டார். மேட்டுப்பாளையத்தில் இறங்கும் சமயத்தில் “டாக்டர், அந்த மாத்திரையின் ப்ராண்ட் நேம் என்ன? என்று கேட்டேன். “மாத்திரையா... அது என் கோட்டில் இருந்த பட்டன்! என்றார்.

    இது அண்மையில் நடந்தது. இதையும் நம்பமாட்டீர்கள். நம்பினால்- இறைவனை நம்பினால்- இறைவனை முழுமையாக நம்பினால் நல்லதே நடக்கும் என்பதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.

 சென்ற வாரம் நான் பணியாற்றும் பள்ளியில் ஒரு மாணவன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். கரூரில் மருத்துவர் உட்பட அனைவரும் நம்பிக்கை இழந்தனர்., நான் இழக்கவில்லை. உடனே கால தாமதமின்றி கோவை கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிரசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். இப்போது அவன் பிழைத்துக் கொண்டான். அவன் விரைவில் உடல்நலம் பெற்றுப் பள்ளிக்குத் திரும்பி ஓடியாடி விளையாட இறைவன் அருள்புரிய வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை செய்தோம்.

 ஐந்தே நாள்களில் வீடு திரும்பிவிட்டான். when prayers go up blessings come down என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

    எனவே நம்பிக்கைதான் அனைத்துயிர்களுக்கும் மூலாதாரம்.

                          


2 comments:

  1. நம்பிக்கைதானே வாழ்க்கை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. Where there is a belief there is a hope! And where there is hope there is a way!!

    ReplyDelete