Friday 6 February 2015

எங்கே போகிறோம்?

     சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்து இறங்கும்போது அதிகாலை 4.15 மணி. முதல் நாளே ஃபாஸ்ட் ட்ராக் டாக்சிக்கு கேரியருடன் கூடிய வண்டிக்கு முன்பதிவு செய்திருந்தோம். மறுநாள் என் மனைவி  அமெரிக்கா செல்ல இருந்ததால் இரு பெரிய பெட்டிகள், பைகள் என கூடுதல் சுமையோடு வந்ததால்தான் இந்த ஏற்பாடு.

 ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் டாக்சி வரவில்லை. சென்னைக் குளிரில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வந்த வண்டி எங்களுக்கு ஏற்றதாக இல்லை. அதாவது நாங்கள் மூவர், பெட்டிகள் இரண்டு என்பதால் ஒத்துவரவில்லை. தொலைப் பேசியில் தொடர்பு கொண்ட போது வேறு வண்டியை அனுப்புவதாக சொன்னார்கள். நேரம் ஆனதே தவிர வண்டி ஏதும் வரவில்லை.

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் வந்து வந்து  கேட்டுக்கொண்டே இருந்தனர். என் மகள் மீண்டும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சத்தம் போட்டாள். போலீசில் புகார் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லிப்பார்த்தாள். கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வேறு ஒரு டாக்சியை பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது மணி காலை 6.15 மணி. மீண்டும் என் கைப்பேசி  சிணுங்கியது, “சென்ட்ரலுக்குமுன் நிற்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?” என்று ஃபாஸ்ட் ட்ராக் ஓட்டுநர் கேட்டார். எரிச்சலில் ஏதாவது பேசிவிடக்கூடாதே என்ற உணர்வோடு, “உங்கள் சர்வீஸ் ப்ரமாதம்” என்று சொல்லி முடித்தேன். என் மகள் போலீசில் புகார் செய்யலாம்  என்றாள்.  அப்போது வந்து விழுந்த டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டிலிருந்து செய்தி ஒன்றை அவளிடம் காட்டினேன்.

    இருபத்து மூன்று வயது இளம்பெண் ஒருத்தி ஆட்டோவில் சென்றுள்ளாள். ஒத்துக்கொண்டபடி உரிய இடத்தில் இறக்கிவிடாமல், ஒன்வே அது இது என்று சாக்குப்போக்குச் சொல்லி 500 மீட்டர் தூரத்தில் நிறுத்தி இறக்கிவிட்டார். ஏன் எனக் கேட்டதற்கு அந்த ஓட்டுநர் அவள் கன்னத்தில் அறைந்து விட்டார். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், ஆட்டோ ஓட்டுநருக்குச் சாதகமாகவே பேசி எஃப்.ஐ.ஆர் போட மறுத்து விட்டனர். அவள் விட்டபாடில்லை. மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு ஒப்புக்காக புகாரை ஏற்றுக்கொண்டனர். அப்போது இரவு எட்டு மணி. பத்திரிகையாளர் தலையிட்டபோது, முதலில் அவள்தான் ஓட்டுநரின் முதுகில் அடித்தாள் என்று ஒரு கிளைக்கதையைச் சொன்னார்கள்.

இது ஒரு புறம் இருக்க, பொது இடத்தில் ஒரு பெண்ணின் கன்னத்தில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்ததைக் கூடி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர்கூட அவளுக்குச் சாட்சி சொல்ல வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

நாம் எங்கே போகிறோம்?


No comments:

Post a Comment