Wednesday 30 September 2015

வீழினும் வேங்கையென எழுகவே!

  இளமையிலே சோம்பிநீ இருக்கலாமா?
    வளமையிலே வாழ்வதற்கு மறுக்கலாமா?
இளமயிலே!  சோம்பிநீ இருக்கலாமா?
   வளமயிலே!  வாழ்வதற்கு மறுக்கலாமா?

இளந்தமிழில் இனிதாகப் பேசிடவும்
   இயல்பாகப் பிழையின்றி எழுதிடவும்
இளமையிலே விட்டுவிட்டால் படியுமா?
   முதுமையிலே முயன்றாலும் முடியுமா?

உறங்கிக் கிடந்தால் இந்நாளில்
        ஊரே சிரிக்கும் பின்னாளில்
பிறந்ததும் வாழ்வதும் எதற்காக?        
        பெரும்புகழ் பெறுதல் அதற்காக!  
               

தொலைக்காட்சி இப்போது இனிக்கும்
           தொலைந்துவிடும் எதிர்காலம் கசக்கும்!
அலைப்பேசி உனை ஈர்த்து மயக்கும்
            அடுக்கடுக்காய் தீமைகளைப் பயக்கும்! 


இளங்காலை நேரத்திலே எழுவாய்
            இனிதாக இறைவனைத் தொழுவாய்
வளங்காண நாள்தோறும் படிப்பாய்
            வாழ்வினிலே சாதித்து முடிப்பாய்!

துடிப்புடன் செயலாற்று துன்பமிலை
    துணிந்திடு படிப்பதற்கே இன்றுமுதல்!
விடிந்ததும் இந்நாட்டின் தலைவன் நீ
    வீழினும் வேங்கையென எழுகவே!
                                     முனைவர் அ.கோவிந்தராஜூ
 ----------------------------------------------------------------------------------------------------------------------

 உறுதி மொழி
1. இது எனது சொந்தப் படைப்பாகும்
          2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்      
            போட்டிகள் 2015 (வகை 5 மரபுக் கவிதை) க்காகவே                எழுதப்பட்டது.

          3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
            வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்படமாட்டாது.

             
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------           

Monday 28 September 2015

பெண் என்னும் பெருஞ்செல்வம்

    இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது!. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது?

Monday 21 September 2015

இலக்கை அடைய இனிமுயல் வாரே!

வளரிளம் சிறுமியர் வகைவகை யான
இளமைக் கனவில் இன்புற் றிருப்பர்
கண்டது காட்சி கொண்டது கோலம்
கண்டதை எண்ணிக் கருத்தழி வார்கள்
வளரிளம் சிறுவர்  வயதில் என்றும்
இளமைக் குறும்பு இயல்பாய் இருக்கும்
கண்டதைக் கிறுக்கி கவிதை என்பர்
உண்பதை மறுத்து உறங்கிடு வாரே!

பள்ளி வயதில் கொள்ளும் காதல்
பாலினக் கவர்ச்சி பிறிதொன் றில்லை
பள்ளி வயதில் காதல் கொள்ளல்
கொள்ளி யால்தலை வாரல் ஒக்கும்.
 பள்ளிப் பருவம் துள்ளும் பருவம்
கொள்ளி நெருப்பாம் காதலில் சிக்கி
பெற்றோர்  வருந்தி பெருந்துயர்  எய்த
கற்றலில் தாழ்ந்து கதிகலங் குவாரே!

 பள்ளிசெல் வயதில் காதல் தீது
காதல் செய்யின் மோதல் நிகழும்
மோதலின் பின்னே சாதலும் உண்டு
ஆதலால் பள்ளிக் காதல் தவறே! 
அவர்களை அழைத்து அருகில் அமர்த்தி
தவத்தொடு மூச்சுப் பயிற்சி யளித்து
இலக்கை அடைய இதுவழி என்றிட
இலக்கை அடைய இனிமுயல் வாரே!

 -    முனைவர் அ.கோவிந்தராஜூ


------------------------------------------ உறுதி மொழி---------------------------------------------------------------

             1. இது எனது சொந்தப் படைப்பாகும்
            2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
                 இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்       
                போட்டிகள் 2015 வகை 5 போட்டிக்காகவே எழுதப்பட்டது.

              3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
                   வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்பட
                    மாட்டாது.            



Sunday 20 September 2015

காலம் எல்லாம் குறள்வழி நிற்க

என்னால் முடியுமெனும் எண்ணம் வேண்டும்
            ஏன்முடி யாதென எண்ணல் வேண்டும்
முன்னேற வேண்டுமென முழுதாய் எண்ணி
         முனைப்போடு முயன்று நடத்தல் வேண்டும்
நன்னெறி சிந்தனை நல்வழி காட்டும்
          நற்செயல் செய்க., நானிலம் போற்றும்
தன்னால் நடக்கும் தலைவிதி என்று
         தயங்கி நின்றால் தவறி வீழ்வாய்!

காலம் கருதிநீ கருத்துடன் பணிசெய்தால்
        ஞாலம் கைகூடும் நவின்றார் வள்ளுவரும்
பாலம் எனும்படியாய் பலகுறள் இங்கிருக்க
        பாவம்! ஏனப்பா பரிதவித்து நிற்கின்றாய்?
ஓலம் ஒப்பாரி ஒருபோதும் உதவாது
        ஓரடி முன்வைத்தால் ஒருகாத வழிதெரியும்!
ஆலம் விழுதென அவனியைத் தாங்கும்
         ஆற்றல் இருப்பது உனக்கே புரியும்!

வெற்றி வந்தால் பெற்றுக் கொள்க
        வீழ்ந்து விட்டால் கற்றுக் கொள்க
கற்க விரும்பிடின் இளமையில் கற்க
        காலம் எல்லாம் குறள்வழி நிற்க
     நெற்றி வியர்வை நிலத்தில் வீழ
              நல்லுடல் பயிற்சி நாளும் செய்க!
    பற்பல மொழிகள் கற்றிடல் தெம்பு
              பைந்தமிழ் மொழியே உயிரென நம்பு!

                           -முனைவர் அ.கோவிந்தராஜூ

-----------------------------------------------------------------------------------------------------------------------
                          உறுதி மொழி

..:               1. இது எனது சொந்தப் படைப்பாகும்

         2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்       
           போட்டிகள் 2015-வகை 5 மரபுக் கவிதைப் போட்டிக்காகவே
            எழுதப்பட்டது.

        3.இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு வெளிவரும் 
          வரை இப்படைப்பு வேறு எந்த இதழுக்கும் அனுப்பப்பட    மாட்டாது.

Thursday 17 September 2015

வேலியே பயிரை மேய்ந்தது

  பண்டைக் காலத்தில் வாழ்ந்த சிபி சக்கரவர்த்தியை உங்களுக்குத் தெரியும். வேடன் ஒருவனிடமிருந்து தப்பித்துத் தன்னிடம் அடைக்கலம் என ஒரு புறா வந்தபோது அவர் அதைக் காப்பாற்றிய விதமும் உங்களுக்குத் தெரியும்.

Friday 4 September 2015

ஆசிரியர்களைக் கொண்டாடிய அரும்புகள்

    ஆசிரியர் தினத்தில் மாணாக்கச் செல்வங்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். காலையில் பள்ளிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் குழந்தைகள் வந்து சூழ்ந்து கொண்டனர்.