Monday 31 July 2017

எங்கும் திரியும் எந்திர விலங்குகள்

   ஒரு வாரமாக ஒட்டாவா நகரம் முழுவதும் இதே பேச்சுதான். இரண்டு எந்திர விலங்குகள் செய்யும் அட்டகாசம் உண்மையில் கொஞ்சம் அதிகம்தான். இவை தெருக்களில் நடமாடும்போது கார்கள் செல்ல முடியாது. பேருந்துகள் கூட சற்றுத் தடுமாறி தடம் மாறிச் செல்கின்றன.

Wednesday 26 July 2017

சிறுகதை



மூன்றாம் பரிசு
முனைவர் அ.கோவிந்தராஜூ

    “கடலக்கா சட்னியும் தோசையும் இருக்குடா. சாப்டுட்டு போ”
“சரிங்கம்மா” என்று சொல்லிவிட்டு தெருக்குழாயில் குளிக்கப் போனான் குமரன்.

 “எப்பவும் மாதிரி இந்தவாட்டியும் குமரன்தான் முந்தி வரணு முருகா! மொதப்பரிச வாங்குணு முருகா” என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டாள் வடிவு.

  வடிவு பத்தாம் வகுப்பை எட்டிப்பிடித்தவள்.

  முத்து ஐந்தாம் வகுப்போடு சரி. வகுப்பறையில் தன்னை அடித்த ஆசிரியரின் பைக்கில் இருந்த  பெட்ரோல் டேங்கில் உப்பைப் போட, அதை எங்கிருந்தோ பார்த்த ஒருவன் ஆசிரியரிடம் வத்தி வைக்க, அந்த ஆசிரியர் அவனுடைய எலும்புகளை எண்ணிவிட்டார். அத்தோடு முடிந்தது அவன் படிப்பு.

   இருபது வயது ஆகியும் சாமி மாடாய்த் திரிந்தான். அரசுப்பள்ளி இரவுக் காவலராய் இருந்த அவனுடைய அப்பா ஒரு சாலை விபத்தில் இறந்து போக  கருணை அடிப்படையில் அதே வேலையில் சேர்ந்தான் முத்து.

   வேலை கிடைத்ததும் முத்துவுக்குக் கல்யாண ஆசை வந்தது. தன் மாமன் மகள் வடிவைக் கட்டிக்கொண்டான். அடுத்த ஆண்டே மகன் பிறந்தான். வடிவு ஆசைப்பட்ட மாதிரியே திருப்பூர் குமரன் நினைவாக குமரன் என்று பெயர் வைத்தார்கள்.

 “குமரா போயி அந்த முருகன் படத்தையும் ஒங்க அப்பா படத்தையும் தொட்டுக் கும்புடு. இது ஈரோடு மாவட்ட அளவுல நடக்கிற ஓட்டப்பந்தயம் நீதான் மொதல்ல ஓடியாரணு ஆமாம் பாத்துக்க” கறாராகச் சொன்னாள் வடிவு. இருவரும் அந்த ஒற்றை அறை வாடகை வீட்டைப் பூட்டிக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தார்கள்.

   ஓடத்துறை ஓ.கு.தி.நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிப்பவன் குமரன். அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருப்பவள் வடிவு. குமரன் ஆறாம் வகுப்பு படித்தபோது ஒரு நாள் இரவில்  இடி விழுந்து மாண்டு போனான் முத்து. தலைமையாசிரியரின் பரிந்துரையால் கருணை அடிப்படையில் கிடைத்ததுதான் இந்த வேலை.

      அப்பா இல்லாத பிள்ளையாக இருந்தாலும் அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்னும் உறுதியோடு, ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுடனும் படித்தான் குமரன். படிப்பில் சுமாராக இருந்தாலும் விளையாட்டில் முதலிடம் பிடிப்பதில் சுட்டியாக இருந்தான்.

   உடற்கல்வி ஆசிரியர் சங்கரப்பன் கொடுத்த தீவிரப்  பயிற்சியில் விளையாட்டில் திறமை மிக்க ஒரு பட்டாளமே உருவாகியிருந்தது. ஓட்டப் பந்தயம் என்றால் ஓ.கு.தி. பள்ளிக்குதான் வெற்றிக் கோப்பை என்பது எழுதாச் சட்டமாக இருந்தது. நகரப் பேருந்தில் கவுந்தப்பாடி சென்று அங்கிருந்து ஓர் இடைநில்லாப் பேருந்தில் ஈரோடு வ.உ.சி திடலை அடைந்தனர்.

    பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, திடலின் ஒருபக்கம் குமரன் உள்ளிட்ட ஐந்து விளையாட்டு வீரர்களையும் அழைத்துச் சென்று, போட்டிக்கு முன்னர் செய்யப்படும் உடல் தயார்நிலைப் பயிற்சி அளித்தார் சங்கரப்பன். சற்று நேரத்தில் கால் இறுதிப் போட்டிக்கான முதலாம் அழைப்பை அறிவித்தார்கள். அரங்கம் நிறைந்த கூட்டம்; ஆரவாரம் பொங்கி வழிந்தது.
   1500 மீட்டர் ஓட்டப்பந்தயம். தட களத்தில் மூன்றே முக்கால் சுற்று ஓடிவர வேண்டும். காலிறுதி, அரையிறுதி தகுதிச்  சுற்றுகளில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்களில் ஓ.கு.தி. பள்ளி மாணவர் இருவர்- குமரனும் அவனுடைய உயிர்த் தோழன் வெற்றிச் செல்வனும்; மற்றப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் ஆறு பேர்.

   எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட  ஓடு பாதையில் உரிய இடத்தில் ஓடுவதற்குத் தயாராக குத்துக் காலிட்டு பாயும் புலிக்கணக்காக நின்றனர். காற்றுத் துப்பாக்கியின் வெடிச் சத்தம் கேட்டதும் சீறிப் பாய்ந்து ஓடினார்கள். பார்வையாளர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. குதிரையைப் போல ஓர் ஒழுங்கு முறையில் தலையை ஆட்டிக் கொண்டே குமரன்  ஓடிக் கொண்டிருந்த அழகை எல்லோரும் ரசித்தனர்.

   நான்காவது சுற்றிலும் முதல் ஆளாக  ஓடிக் கொண்டிருந்த குமரன் தன்     நண்பனை  ஓரக்கண்ணால் தேடிப் பார்த்தான். தன்னைத் தொடர்ந்து இரண்டாவதாக வருவது தெரிந்தது.. இன்னும் ஒட வேண்டிய தூரம் சுமார் நூறு மீட்டர்  இருந்தபோது குமரன் ஓடிய ஓட்டத்தில் ஒரு தொய்வு தெரிந்தது. சங்கரப்பன் ஆசிரியர் கவனித்துவிட்டார். கண் மூடி திறப்பதற்குள் வெற்றிச் செல்வன் வெண் கோட்டை முதலில் தொட்டான்; குமரன் மூன்றாவதாக வந்து வெண் கோட்டைத் தாண்டி சுருண்டு விழுந்தான்.

    குமரன் மாலையில் வீடு திரும்பியபோது அவனுடைய அம்மா முகம் கொடுத்துப் பேசவில்லை. எப்போதும் முதல் பரிசு பெற்றவன் மூன்றாம் பரிசுடன் வந்ததும் அவள் இடிந்து போனாள். தன் கணவன் இறந்தபோது அழுது புலம்பியவள் அதற்குப்பிறகு இப்பொழுது அழுதாள்.

   வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான் குமரன்.
“அம்மா அம்மா ஹெட்மாஸ்டர் வந்திருக்கார்”

  அவசரம் அவசரமாக தன் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

 “வணக்கம் சார்” என்று சொன்னபடியே நாற்காலியை இழுத்துப் போட்டான் குமரன்.

  “வணக்கம் ஐயா வாங்கயா இப்புடி ஒக்காருங்கயா” என்று கை கூப்பினாள் வடிவு.

  இலேசாக விரிசல் விட்டிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் கவனமாக அமர்ந்தார் தலைமையாசிரியர் அப்பாவு.

  “தெரியும். நீங்க சோகமாத்தாத்தான் இருப்பீங்கன்னு”

 “ஆமாங்கயா. நீங்களே சொல்லுங்க எப்பயாச்சும் குமரன் மொதப்பரிசை கோட்டவுட்டுப்புட்டு வந்திருக்கானா சொல்லுங்க ஐயா” –வெடித்தாள் வடிவு.

 குமுறிக் குமுறி அழுதாள்.  குமரன் மவுனமாக நின்றான்.

  “இங்க பாருங்கம்மா... இப்ப என்ன ஆச்சின்னு இப்படி அழுகுறீங்க. முதல் பரிசுன்னா ஒசத்தி, மூணாம் பரிசுன்னா கேவலமா?  எப்பவும் ஒருத்தன் முதல் பரிசாவே வாங்க முடியுமா? நாட்டுல வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்ல.  விளையாட்டுல ஒரு நேரம் ஜெயிக்கிறதும் ஒரு நேரம் தோக்கறதும் இயல்புதாம்மா.

  ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா? பாரதியாரு சின்னப் பையனா இருந்தப்ப ஒரு போட்டியில கலந்துகிட்டு பாட்டெழுதி படிச்சாரு. மூணாம் பரிசுதான் கெடச்சிது. மொதப் பரிசு வாங்கின பாட்டு என்னாச்சின்னே யாருக்கும் தெரியல. மூணாம் பரிசு வாங்குன செந்தமிழ் நாடென்னும் போதினிலேங்கிற பாட்டுதான் இப்பவும் நெலச்சி நிக்குது.

 அந்த  மொதப்பரிசு வாங்குன ஆசாமியோட பேரு ஊரு யாருக்காவது தெரியுமா? மூணாம் பரிசு வாங்குன பாரதியாரைத்  தெரியாதவங்க யாராவது இருக்காங்களா சொல்லுங்க.”

  வடிவுக்கு ஞானோதயம் வந்ததற்கான பொறி தட்டியது.  மகனைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டாள்.

  வந்த வேலை  முடிந்தது என்னும் நிம்மதியுடன் விடைபெற்றார் தலைமையாசிரியர் அப்பாவு.

   


Monday 24 July 2017

உடல் நலத்திற்கான மந்திரக் கோல்

    டாக்டர் வைத்தீஷ் அகர்வால். புது தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் மூத்த மருத்துவர். ஆங்கில நாளேடுகளில் எழுதி வருபவர். நல்ல மனநல ஆலோசகரும் கூட.

Saturday 22 July 2017

பந்து உங்கள் ஆடுகளத்தில்!


இப்படித்தான் திடீர் திடீரென்று எனக்கு ஹைக்கூ பைத்தியம் பிடித்துவிடும். எடு மடிக்கணினியை; தொடு எழுத்துகளை; இடு பதிவை என ஆரம்பித்து விடுவேன். இல்லை இல்லை ஆரம்பித்து விடமாட்டேன்; விடவே மாட்டேன்.
இப்போது எனது ஹைக்கூ பந்து உங்கள் ஆடுகளத்தில்.

Wednesday 19 July 2017

மாமணி போற்றுதும்

     நிசப்தம் மணிகண்டன் என வலையுலகத்திலும் மணி என நட்பு வட்டத்திலும் அறியப்படுபவர். அன்று தலைசிறந்த பத்துப் பேர்களில் ஒருவராக ஆனந்த விகடன் அறிவித்தது. இன்று தி இந்து தமிழ் நாளேடு பாராட்டுகிறது.

Monday 17 July 2017

ஒப்பிலா ஒலி ஒளிக் காட்சி

    ஒட்டாவா நகரில் அடுத்துப் பார்க்க வேண்டிய முக்கிய நிகழ்வு இது. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய காட்சி முப்பது நிமிடங்களே நீடித்தது. ஆனால் மூன்று நிமிடங்களில் முடிந்துபோன உணர்வு ஏற்பட்டது.

Friday 14 July 2017

இது வாழும் முறைமையடி பாப்பா

   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்? ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கோடி சேர்த்தால் கோடி நன்மை என்னும் நவீன பொருளியல் சிந்தனை மனித மனத்தில் வேரூன்றி விட்டது. பொருளைத் தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். வாழ்வின் மாலைப்பொழுதில் திரும்பிப் பார்த்து “என்ன வாழ்க்கையடா வாழ்ந்தோம்?” என எண்ணிப் பார்க்கிறான். வாழத் தெரியாமல் வாழ்ந்ததை எண்ணி வருந்துகிறான். கண் கெட்டபின் சூரிய வணக்கம் சாத்தியமில்லையே! இவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கைகொட்டிச் சிரிக்கிறார். சிரித்து ஓய்ந்ததும் ஒரு சிந்தனைக் குறளை இவர்களுக்காக செதுக்கி அளிக்கிறார்:

Sunday 9 July 2017

போற்றத் தகும் பொதுப் போக்குவரத்து

   பொதுவாக எல்லோருக்கும் காரில் பயணிக்க ஆசைவரும். ஆனால் எனக்கு இங்கே பேருந்தில் பயணிக்க பேராசை வந்தது. கனடா வந்து ஒரு மாதம் ஆன பின்னால் இன்றுதான் அந்த ஆசை நிறைவேறியது. அதுவும் தனியாகப் பயணித்தேன். ஒட்டாவா விமான நிலையம்வரை சென்று திரும்பினேன்.

Wednesday 5 July 2017

கண்ணை விட்டு அகலாத கவின்மிகு நயாகரா



சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பெரிய மகளின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றபோது இதே சமயத்தில் நயாகரா அருவியைக் கண்டு வியந்தோம். அப்போது அமெரிக்காவில் இருக்கும் நயாகராவைப் பார்த்துவிட்டு, கனடா நாட்டின் அணிகலனாய்த் திகழும் நயாகரா அருவியைக் காண்பதற்கான கனவு விதையை மனத்தில் ஊன்றினேன்.


அந்தக் கனவு என் இளைய மகள் மூலமாக இப்போது நனவானது. இங்கு ஒட்டாவாவில் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றும் நண்பர் குமரேசன் தன் மகிழுந்தைத் தந்ததோடு தானே சாரதியாகவும் வர ஒப்புக்கொண்டார். காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு இடையில் ஒரு சாலையோர விடுதியில் சற்றே இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். 


வழியில் கிங்ஸ்டன் நகரை ஒட்டியிருந்த ஆயிரம் தீவுகள் பகுதியில் இறங்கி ஒரு நோட்டம் விட்டோம். அடுத்த மாதம் இங்குவந்து ஒரு நாள் முழுவதும் படகு சவாரி செய்து ஒரு நூறு தீவுகளையாவது பார்க்கும் திட்டம் உள்ளது. நகரை ஒட்டி விரிந்து கிடந்த கடலில் நூற்றுக்கணக்கில் படகுகள் திரிந்து கொண்டிருந்தன. அவை மட்டுமா திரிந்தன? வண்ண வண்ண வாத்துகளும் நம் இலக்கியத்தில் வரும் இணைபிரியா அன்றில் பறவைகளைப்போல நீந்தித் திரிந்தன. அவற்றையெல்லாம் அண்மையில் தந்தையர் நாள் பரிசாக மகள் எனக்கு வழங்கியிருந்த வீடியோ கேமிராவில் பிடித்துப் போட்டுக்கொண்டேன். பயணம் தொடர்ந்தது.

மாமியார் வீட்டுக்கு ஓய்வாக வந்து ஒருவாரம் தங்கிய மருமகனைப்போல் மழையும் தூறலும் சில நாள்களாகத் தொடர்ந்து இருந்தது. கடும் மழையிலும் விரைந்தோம். 2.30 மணிக்கு டொரண்ட்டோ நகரின் மையப்பகுதியில் காரை நிறுத்தினார்கள். எட்டிப் பார்த்தால் நம்மூர் சரவணபவன் கண்ணில் பட்டது. பஞ்சாபி ஒருவர் பெயர் உரிமை(Franchise) ஏற்று உணவகத்தை நல்லமுறையில் நடத்துகிறார். 


அந்த உணவகத்தில் தட்டேந்தி முறையில்(Buffet system) உண்ண, தின்ன, பருக, கடிக்க, நக்க என பதினாறு வகையான பதார்த்தங்களை வேண்டுமளவு எடுத்து வயிறார உண்டு மகிழலாம். அவ்வப்போது ஓர் பஞ்சாபி இளமங்கை இளநகையுடன் வந்து சூடான தோசை பூரிகளைப் பரிமாறிச் சென்றாள். தட்டில் உணவை மீதி வைத்தால் ஒரு டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்ததை முழுமையாக உண்டு விடுங்கள் என்னும் பொருள்பட Take all you eat and eat all you take என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன். நல்ல வேளை நாங்கள் ஒரு பருக்கையைக் கூட வீணடிக்கவில்லை பற்றுக்கோடு அட்டையை(Debit Card) உரசி ஐவருக்கும் சேர்த்து ஐம்பத்தைந்து டாலரை செலுத்தியதோடு, சில பாராட்டு வார்த்தைகளையும் சொல்லிவிட்டு வெளியே வந்தோம். 

அருகிலிருந்த டொரண்ட்டோ பொது நூலகத்தை எட்டிப் பார்த்துவிட்டு நேரே விமான நிலையம் சென்றோம். அது கனடாவின் மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய என் மகளின் கல்லூரித் தோழி சத்யாவை வரவேற்றோம். அவள் எங்களின் இன்னொரு மகள் மாதிரி பழகுவாள். அவள் இருக்குமிடத்தில் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். எங்களுடன் அவளையும் அழைத்துக்கொண்டு நயாகராவை நோக்கி விரைந்தோம். 

இப்போது ஓட்டுநர் இருக்கையில் என் மகள் புவனா. கவனம் சிதறாமல் காரை ஓட்டிய அழகை இரசித்தபடி பின் இருக்கையில் அமர்ந்து இருபுறமும் 120 கிலோமீட்டர் வேகத்தில் பின்னோக்கிப் பயணித்த மரங்களையும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டே சென்றேன். 

மாலை சரியாக எட்டு மணியளவில் நயாகரா நகரில் நுழைந்து உரிய இடத்தில் வண்டியை நிறுத்தினாள். பொழுது சாய்வதற்குள் நயாகரா அருவியைப் பார்த்துவிட வேண்டும் என்னும் முடிவோடு ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.

நயாகரா அருவி பேரழகின் பெட்டகமாகத் திகழ்ந்ததைக் கண்டு வியப்பில் கத்தினோம். சமையலறை மேடையில் அம்மா வைத்திருந்த பாலை ஒரு பூனை தள்ளிவிட்டால் எப்படிப் பரவி அங்கிருந்து தரையில் கொட்டுமோ அப்படித்தான் சமவெளிப் பகுதியிலிருந்து பாலெனப் பரவி பட்டென கீழ்நோக்கிக் குதிக்கிறது நாம் பார்க்கும் இந்த நயாகரா அருவி.


பரண் மீதிருந்த பாலைக்
கவிழ்த்து விட்டது யார்?
அருவி


என்று எப்போதோ நான் எழுதியிருந்த ஹைக்கூ கவிதை நினைவில் தோன்றி மறைந்தது.




அருவி நீர் ஆறாக மாறி ஆர்ப்பரித்து ஓடும் அழகே அழகு! ஆற்றின் இந்தப்பக்கம் கனடா அந்தப்பக்கம் அமெரிக்கா. இரு நாடுகளையும் இணைக்கிறது ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப் பழமையான ஓர் இரும்புப் பாலம். பாஸ்போர்ட்டும் விசாவும் கைவசம் இருந்தால்தான் அந்தப் பாலத்தைக் கடக்க முடியும். இங்கே அருவியை ஒரு பறவையைப்போல மேலிருந்து காண்பதற்காக 168 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தைக் கட்டியுள்ளார்கள். ஸ்கைலன் டவர்(Skylon Tower) என்று பெயர்.




1867 ஆம் ஆண்டு இந்த அருவி சுற்றுலா பயணியருக்குத் திறந்து விடப்பட்டதாம். கனடா ஆண்ட்டாரியோ மாநிலத்தின் மிகப்பழமையான சுற்றுலாத் தலம் இதுதானாம். 

ஒருவருக்கு படகுக் கட்டணமாக நாற்பது டாலர் (ரூபாய் இரண்டாயிரம்) எனக் கட்டணம் செலுத்தி, மின்தூக்கி மூலம் இறங்கி ஆற்றின் படகுத்துறைக்குச் சென்றோம். படகு மூலம் அருவியின் அருகில் சென்று அருவி நீர் விழும் காட்சியைப் பார்ப்பதற்காக வரிசையில் நின்றோம்.



அருவிச் சாரலில் நனையாமல் இருப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஒரு பாலித்தின் அங்கியைக் கொடுத்தார்கள். இது இல்லை என்றால் தொப்ப ந
னைந்திருப்போம்

Horn Blower என்னும் இரண்டடுக்கு இயந்திரப் படகின் மேற்தளத்தில் ஏறி நின்றுகொண்டு அருவியை நோக்கி முன்னேறினோம். உயரமான இடத்தில் அமைந்திருந்த எல்.இ.டி மின் விளக்குகளிலிருந்து பாய்ச்சப்பட்ட வண்ண ஒளிவெள்ளம் அருவியின் மீது பட்டு வர்ணஜாலம் நிகழ்த்தியது ஏழு வண்ண ஒளிகள் அருவி நீரில் மாறி மாறி விழுந்தது கண்களைவிட்டு அகலாத காட்சியாகும். அந்த இரவு நேரத்திலும் வெள்ளை நிற கடற்காகங்கள் விண்ணில் பறந்தன. பாயும் ஒளிக்கேற்ப அவற்றின் சிறகுகளும் வண்ண மயமாய் மாறி எண்ணத்தைக் கொள்ளை கொண்டன!.










குதிரை லாட வடிவில் அமைந்துள்ள அருவியிலிருந்து சிவந்த நிறத்தில் வழிந்த நீர் அடுத்தகணம் நீலமாக மாறிக் கொட்டியது. மலரின் மகரந்தத்தூள் போன்ற சாரல் துளிகள் எங்கள் மேல் கொட்டின சாரலைப் பொருட்படுத்தாமல் காமிராவை வெளியில் எடுத்துச் சில படங்களை எடுத்தேன். ஒரே ஒரு நிமிடம் மட்டும் அங்கே நின்ற படகு திரும்பி விரைந்தது. கொஞ்ச தூரம் சென்று நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல நின்றது. 


நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாண வேடிக்கை வான வேடிக்கையாகத் தொடங்கியது. சிவகாசி வாணங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி விண்ணில் விட்டதுபோல் அடுத்த இருபது நிமிடங்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஒருபக்கம் மனம் மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் வானவெளி மாசடைகிறதே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்தது.

பிரிய மனமில்லாமல் அருவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தோம். குளிர் என்றால் அப்படியொரு குளிர். மனைவி என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நடந்தாள். இதற்காகவே அடிக்கடி நயாகராவுக்கு வரலாம் போலிருந்தது! 

இரவு பத்தரை மணி. கொண்டு வந்திருந்த பொடிதடவிய அதி கார இட்லியை அளவாய்ச் சாப்பிட்டுவிட்டு காரில் ஒடுங்கினோம். இப்போது குமரேசன் ஓட்டுநர் இருக்கையில்; அவருடைய இரு கையில் செலுத்துச் சக்கரம்(Steering wheel). சாலையெல்லாம் ஈரம்; 600 கிலோமீட்டர் தூரம்; ஐந்துமணி நேரம்.

இறையருளால் அதிகாலை நேரத்தில் பாதுகாப்பாக ஒட்டாவா வந்து சேர்ந்தோம்..

படுத்துறங்கி நண்பகலில் எழுந்தபோது கண்களை விட்டுத் தூக்கம் அகன்றது; ஆனால் நயாகரா அகலவில்லை.

கனடாவிலிருந்து
முனைவர் அ.கோவிந்தராஜூ





Sunday 2 July 2017

வாழ்க கனடா

   இன்று ஜூலை ஒன்று
     கனடாவின் 150 ஆவது பிறந்த நாள்.