Wednesday 19 July 2017

மாமணி போற்றுதும்

     நிசப்தம் மணிகண்டன் என வலையுலகத்திலும் மணி என நட்பு வட்டத்திலும் அறியப்படுபவர். அன்று தலைசிறந்த பத்துப் பேர்களில் ஒருவராக ஆனந்த விகடன் அறிவித்தது. இன்று தி இந்து தமிழ் நாளேடு பாராட்டுகிறது.
 அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நிசப்தம் வலைத்தளத்தில்(www.nisaptham.com) அவர் எழுதும் கட்டுரைகள். இரண்டு அவரது ஒளிவு மறைவற்றத் தன்மையுடன் கூடிய நேர்மை. இன்றைக்கு அவரிடம் இலட்சக்கணக்கில்  ரூபாயைத் தந்து நம்பிக்கையுடன் ஒதுங்கிக்கொள்ளும் முகம் தெரியாத மனிதர்கள் பலர். மேலும் அவர் எழுதியுள்ள நூல்களுக்குப் பதிப்பாளர் நல்கும் தொகையையும் தன் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறார்!

  
Courtesy: The Hindu Tamil 18.07.2017
நிசப்தம் அறக்கட்டளையால் பெறப்படும் தொகையில் நா வறண்டு போன நிலையிலும் ஒரு குடுவை தண்ணீர் வாங்கிக் குடிக்கமாட்டார். எனக்குத் தெரிந்த வகையில் பொதுப்பணத்தை மிகச் சரியாகச் செலவழித்து, அதற்குச் சரியான கணக்கைக் காட்டியவர்கள்  அந்தக் காலத்தில் காந்தி, காமராசர், கக்கன் ஆகியோர்; இந்தக் காலத்தில் டாக்டர் அப்துல் கலாம். இந்த வரிசையில் மணிகண்டனைச் சேர்க்கலாம்.

  கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் போலிப் பக்தர்களாக அறக்கட்டளை என்ற பெயரில் காசு பார்க்கும் நாட்டில், சரியான பயனாளிகளைப் படாத பாடுபட்டுக் கண்டுபிடித்து, காலத்தால்  உதவும் அவரது கொடைக் கோட்பாட்டைக்கண்டு வியந்து நிற்பேன். அவருக்கு வாய்த்துள்ள நண்பர் குழாம் அப்படி! அவர் எள் என்றால் அவர்கள் எண்ணெய்யாக இருப்பர்.

 ஒரு குடும்பத்தில் கணவன் செய்யும் அடாவடிச் செயல்களுக்கு மனைவி துணை நிற்பது தவறு. அதேபோல் கணவன் செய்யும் நல்ல செயல்களுக்கு மனைவி துணை போகாமல் இருந்தாலும் தவறுதான். மணிகண்டன் செய்யும் ‘காரியம் யாவினும் கைகொடுக்கும்’ மனைவி ஒரு துணைவி. அந்த மாண்புறு பெண்மணி கிருஷ்ணவேணி பாராட்டுக்குரியவர். அவர் யார் பெற்ற பிள்ளையோ? அவர் வாழ்க! அவர்தம் குலம் வாழ்க!

    மணிகண்டன் என் தலை மாணாக்கர்களில் ஒருவர். அவருக்கு ஆசிரியராக, தலைமையாசிரியராக ஏழாண்டு காலம் இருந்திருக்கிறேன். ஒரு நல்ல ஆசிரியரால் மாணவருக்குப் பெருமை சேர்வதுண்டு. ஒரு நல்ல மாணவரால் ஆசிரியருக்கும் பெருமை வந்தடையும்.


  அந்த வகையில் மணிகண்டனால் எனக்குப் பெருமை.

7 comments:

  1. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  2. தொடங்குவதற்கு ஒரு நல்ல உள்ளம் இருந்தால்
    தொடர்வதற்கு நூறு மனிதர்கள் தயாராயிருக்கிறார்கள் என்பதைத்தான்
    திரு.மணிகண்டன் அவர்கள் செயல்பாடு மூலம்
    தெரிய வருகிறது
    இப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைச்சுற்றி
    ஒளிவட்டம் அமைத்தத தந்தால் ஏழ்மை இருளை உலகைவிட்டே கடத்திவிடலாம்
    நல்லார்கட்பட்ட திரு ஊருணி நீராய் தாகம் தணிக்கும் என்ற ஐயனின் வாக்கிற்கு உருவம் தரும் மணிகண்டன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  3. அவரது சேவை மிகவும் பாராட்டிற்குரியதாகும். அதனை முன்னுதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அவருடைய ஆசிரியர் என்ற நிலையில் நீங்கள் பெருமைப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  4. ஜாடிக்கேற்ற மூடி போல ஆசானுக்கேற்ற மாணாக்கர்களின். மணிகண்டனை மேதினியோர் போற்றுங்கால் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயாய் உங்கள் உவகையைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்....! பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  5. "ஆசானுக்கேற்ற மாணாக்கர்"என்று திருத்தி வாசிக்கவும்

    ReplyDelete
  6. மணிகண்டன் அவர்கள் மிக மிகப் போற்றுதற்குரியவர்....தங்களின் மாணவர் என்பது எவ்வளவு பெருமை...தங்களுக்கு...வாழ்த்துவோம் அவரை...

    துளசி, கீதா

    ReplyDelete
  7. Very good . I am happy I served as a link between Manikandan and govindaraju through a write up in Dinamalar 3 years ago.

    ReplyDelete