Wednesday 23 August 2017

பிறந்த நாட்டைப் பெரிதும் மதிப்பவர்கள்

  பிறந்த நாட்டைப் பெரிதும் மதிப்பவர்களாக இந்தியர் இருக்கிறார்கள் என்பதற்குக் கனடாவில் நடந்தேறிய இந்திய விடுதலைநாள் விழாவைக் குறிப்பிடலாம்.

   இவ்வாண்டில் நம் விடுதலைத் திருநாள் ஒரு வேலைநாளில் அமைந்துவிட்டதால், அதைத் தொடர்ந்து வந்த ஞாயிறன்று ஆங்காங்கே வாழும் இந்திய மக்கள் விடுதலைநாள் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.





  
இந்தியர் உடையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
(photo courtesy; google)
ஒட்டாவா நகருக்கு அருகில் இருக்கும் முக்கிய நகரம் மான்ட்ரியல். பெரிய பன்னாட்டு விமான நிலையம் அந்நகரை அலங்கரிக்கிறது. அங்கே நடந்த இந்திய நாள் பேரணியில் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுச் சிறப்பித்தார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

   ஒட்டாவா வாழ் இந்தியர்கள் அதே நாளில் இங்கே பெருந்திரளாகக் கூடி, கைகளில் நம் தேசியக்கொடியைப் பிடித்தவாறு, நடுத்தெருவில் நடனமாடிய காட்சி இன்னும் என் கண்ணைவிட்டு அகலவில்லை.

  
கொடியேற்று விழா தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிட்ட ஒட்டாவா நகர மேயர் ஜிம் வாட்சன் மிக எளிமையாக எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். நானும் அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு ஒளிப்படமும் எடுத்துக்கொண்டேன். அப் படத்தை முகநூலில் வெளியிட்டபோது அதை இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் விரும்பினார்கள் என்பது தனிக் கணக்கு.

   
மேடையில் அமைச்சர் கேத்தரின் மெக்கன்னா
(photo courtesy: India Canada Association)
விழாவில் அமைச்சர் பெருந்தகை திருமதி கேத்தரின் மெக்கன்னா, இந்தியத் தூதர் திரு விக்காஸ் ஸ்வரூப், நகர மேயர் ஜிம் வாட்சன் ஆகியோர் பேரணியில் பங்கேற்றதோடு, மேடையேறிப் பேசவும் செய்தார்கள்.

      அமைச்சர் பெண்மணி  இந்தியர் கனடா நாட்டுக்கு அளித்துவரும் பங்களிப்பைக் குறிப்பிட்டுப் பேசினார். நம்மைச் சந்திக்க வந்த விருந்தாளியைப்போல பொன்னகை அணியாத அப் பெண்மணி புன்னகை தவழப் பேசி அசத்தினார்.

  முன்னதாக நாட்டுப்பண் முழங்க, இந்திய கனடா சங்கத் தலைவர் திரு உமேஷ் குமார் தேசியைக் கொடியை ஏற்றினார்.

  

தொடர்ந்து, இந்தியக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் களை கட்டின. சின்னக் குழந்தைகள் காந்தியைப் போலவும் இந்தியத் தாயைப் போலவும் வேடம் தாங்கி மேடையில் தோன்றினார்கள். இங்கே பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவியர் சிலர் மேற்கத்திய இசைக்கு ஏற்ப பரத நாட்டியம் ஆடியது புதுமையாகவும் வெகு சிறப்பாகவும் இருந்தது. காலையில் தொடங்கிய விழா மதியம் இரண்டு மணிவரை நீடித்தது.

    விழா முடிந்து நான் பேருந்தைப் பிடித்து இல்லம் திரும்பியபோது சிறப்பு வழக்காடு மன்றம் தொடங்கியது.

   அதில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் நானும் என் மனைவியும்!
விழாவிற்கு அவளை அழைத்துச் செல்லாதது ஒரு பெருங்குற்றம் என்று தீர்ப்பு வந்தது.


நல்ல வேளையாக தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை!
..................................................
கனடாவிலிருந்து முனைவர் அ.கோவிந்தராஜூ


11 comments:

  1. அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள் ஐயா! அங்கு நமது நாட்டு மக்கள் எல்லோரும் இப்படிக் கொண்டாடுவது வழக்கம். மகிழ்வாக இருக்கிறது!! தாங்களும் மேயருடன் புகப்படம் எடுத்து ப்கிர்ந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

    கீதா: துளசியின் கருத்துடன்.... அதில் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் ஒரு வேதனை உங்களுக்குத் தோன்றியதா ஐயா? கனடாவைப் போன்று நம் நாட்டிலும் நேர்மையும், ஆட்சியும், நிர்வாகமும், கல்வியும், மருத்துவமும் அமைந்திருந்தால் இந்த மக்கள் எல்லாரும் இப்படிப் புலம் பெயர்ந்திருப்பார்களா என்று தோன்றியதா? எனக்கு அப்படித் தோன்றும் ஐயா. நம் குழந்தைகள் இங்கு அவர்கள் படிக்க விரும்பும் கல்வியின் தரம் இல்லை கல்வித் துறையில் இருக்கும் ஊழல் இவை எல்லாம் தானே அவர்களை வெளிநாட்டுக் கல்விக்கு ஏங்க வைத்து அனுப்புகிறது...நம்மை விட்டுத் தொலைதூரத்தில் செல்கிறார்கள்...இல்லையா...இந்த ஆதங்கம் என் மனதில் எழுவதுண்டு ஐயா...

    மிக்க நன்றி பகிர்விற்கு. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...வழக்கம் போல்.

    ReplyDelete
  2. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய் மண்ணை மறவாத நம் மக்களைப் போற்றுகிறேன் ஐயா.

    ReplyDelete
  3. கடல் கடந்தும் நம் நாட்டின் தேசியப்பற்று போற்றுதலுக்குரியது!
    உங்களின் அருமையான நிகழ்ச்சி தொகுப்பிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. கடல் கடந்தும் நம் நாட்டின் தேசியப்பற்று போற்றுதலுக்குரியது!
    உங்களின் அருமையான நிகழ்ச்சி தொகுப்பிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. கனடாவில் வசித்தாலும் தாய்நாட்டின் சுதந்திர தினத்தை​ மகிழ்வுடன் கொண்டாடும் அவர் தம் பாங்கு உவகையூட்டுகிறது. அடிமைகளாக இருந்தோர்க்கே சுதந்திரத்தின் இன்பம் விளங்கும். பெற்ற சுதந்திரத்தைப்​பேணிக் காப்போம்.
    கட்டுரையும் படங்களும் அருமை . சிறப்பு ஐயா.

    ReplyDelete
  6. கனடாவில் வசித்தாலும் தாய்நாட்டின் சுதந்திர தினத்தை​ மகிழ்வுடன் கொண்டாடும் அவர் தம் பாங்கு உவகையூட்டுகிறது. அடிமைகளாக இருந்தோர்க்கே சுதந்திரத்தின் இன்பம் விளங்கும். பெற்ற சுதந்திரத்தைப்​பேணிக் காப்போம்.
    கட்டுரையும் படங்களும் அருமை . சிறப்பு ஐயா.

    ReplyDelete
  7. மிகவும் மகிழ்ச்சி ஐயா...

    ReplyDelete
  8. மிகவும் மகிழ்ச்சி ஐயா
    அருமை

    ReplyDelete
  9. விழா நிகழ்வுப் பகிர்வு வியக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. நல்ல பதிவு. - மேயருடன் படமும் அழகு. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  11. படிக்கப்படிக்க
    மனம் மகிழ்கிறது ஐயாநன்றி

    ReplyDelete