Wednesday 3 January 2018

நாநலம் என்னும் நாகரிகம்

  உலகில் மிகப் பெரிய குடியரசு நாடு நம் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் முதன்மையானது பேச்சுரிமை ஆகும். நம் நாட்டுடன் தொடர்புடைய யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சிக்கலாம். ஆனால் அதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம். நா என்னும் நல்ல கருவியை நச்சு வாளாக மாற்றி பிறர்மீது வீசிக் காயப்படுத்துவதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறோம்.

   அண்மையில் நிகழ்ந்த ரஜனிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்தான நம்மவர் கூறும் விமர்சனப் பேச்சுகள் வரவேற்கும்படியாய் இல்லை என்பது எனது கருத்தாகும். குடியரசு நாட்டில் எத்தொழில் புரிபவரும், பதினெட்டு வயதுக்குமேல் எந்த வயதினரும், சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி எவரும் அரசியலில் நுழையலாம்.

   இப்படி இருக்க, தன் பெயரைக்கூட வெளிப்படுத்தும் துணிவில்லாமல் ஓர் ஐந்து நிமிடக் காணொளிக் காட்சியில் ரஜனிகாந்த் அவர்களைத் தன்  வாய்க்கு வந்த வகையில் வசைமழை பொழிந்து வாட்சப்பில் உலா வரச் செய்கிறார் ஒருவர். ரஜனிகாந்த் இரசிகர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களையும் விட்டு வைக்கவில்லை.

  அவர் சொன்னவற்றில் பீ சாப்பிடுகிறானா சாப்பாடு சாப்பிடுகிறானா மயிரைப் பிடுங்கினானா என்னும் வசைச் சொற்களை மட்டும் எழுதத் துணிந்தேன். அவர் திருவாய் மலர்ந்த மற்ற இழிச்சொல் தொடர்கள் பால் உறுப்புகளை எல்லாம் உள்ளடக்கியவை. எழுத்தில் எழுத இயலாது.

   பேசும்போது நாம் யார் எத்தகையவர் என்பதை நம்மை அறியாமல் வெளிப்படுத்துகிறோம் என்பது பலருக்கும் புரிவதில்லை. நல்ல பண்பட்ட குடும்பத்திலிருந்து முன்பின் தெரியாத ஒருவனுக்குக் கழுத்தை நீட்டிக் காலடி வைத்ததும் கணவன் கண்டபடி கெட்டவார்த்தைகள் பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும்! நரகலில் இல்லையில்லை நரகத்தில் கால் வைத்ததுபோல் உணர்வாள் எனச் சொல்லவும் வேண்டுமா?

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அறிஞர் அண்ணா சொன்னார். அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வெகுநாளாயிற்று. வெள்ளைக்காரன் நம் காந்தியை எவ்வளவு திட்டித் தீர்த்திருக்கலாம்? அவ்வாறு செய்தாரில்லை. சிறைத்தண்டனை வழங்கியபோதுகூட, “மிஸ்டர் காந்தி” என அழைத்துதான் பேசினான்.

   நல்ல கனியிருப்ப நச்சுக் காய்களைக் கவர்வார் போல இன்று பலரும் பொதுவெளியில் பேசுகிறார்கள். இவர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்?

   ஊடகங்களில் பொதுவெளியில் பேசுவோர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பிறந்த குலத்தை ஐயுற வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார். பரவலாக அறியப்படாத குறள் இது.

   நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
   குலத்தின்கண் ஐயப் படும்.

திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்:

   யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
   யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயுறை
   யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
   யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.

இன்னுரை பேசும் இனிய  நாகரிகத்தை இனி நாம்  பின்பற்றினால் மட்டுமே  செந்தமிழர் என மார்தட்டிக் கொள்ளலாம்.

இல்லையேல் கொடுந்தமிழர் என்னும் பெயர் நிலைத்துவிடும்.
............................
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.



12 comments:

  1. உண்மை ஐயா
    மாறுபட்டக் கருத்து இருப்பினும் வார்த்தையில் கவனம் வேண்டும் அல்லவா

    ReplyDelete
  2. நாகரிகமான சொற்கள் நம்மை மேம்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    ReplyDelete
  3. வார்த்தை எண்ணங்களின் வெளிப்பாடாகும். நாகரிகம் இல்லாத வார்த்தைகள் நாகரிகம் இல்லாத எண்ணங்களைத்தானே காட்டுகிறது. எனவே நாகரிகமான சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்று இவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  4. அருமை. நல்ல தகவல். தாங்கள் குறிப்பிட்டது போல “புலனம்” வாயிலாகப் பரப்பப்படும் உரைகள் நாகரிகமாக இருக்கவேண்டும். மனிதப்பண்புகளை மறந்து, தான் தோன்றித் தனமாகப் பேசுபவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறேன். எவர் அரசியலுக்கு வந்தால் என்ன? தவறாகச் சித்தரித்து அநாகரிகமாகப் பேசுபவர்கள் சோற்றில் ரஜினி மண்ணையா போட்டார்.கோபம் தான் வருகிறது.பெயர், முகவரி தந்து பேச இயலாத கபோதி. இதே போன்ற முட்டாள்களை சில கட்சிகள் உருவாக்கி வருகிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். சுதந்திரத் திருநாட்டில் கல்விக்கண் கொடுத்த முதல்வர் மாண்புமிகு கு.காமராஜ் அவர்களை விடுத்து எவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். எவருமில்லை. அந்த வரிசையில் திரு. ரஜினிகாந்தும் இருந்துவிட்டுப் போகட்டுமே!இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன. பைத்தியக் காரனாலும், பிச்சைக்காரனானலும், நல்லவனானலும், கெட்டவனானலும் உழைத்தால் தான் ஒரு வாய் சோறு. எவர் மனதையும் உடலாலும் உள்ளத்தாலும் துன்புறுத்தாதவனே உயர்ந்த மனிதன். மற்றவரெல்லாம் மதியிழந்தவர்களே!.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    கரூர்.

    ReplyDelete
  5. Anna could bring DMK.MGR could bring AIADMK.Same way Rajni could transform the State.Best Wishes for his efforts.

    ReplyDelete
  6. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை
    தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படும் என நம்புவோம்!

    ReplyDelete
  7. நலல்தொரு பதிவு ஐயா.

    நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதைப் பாங்குறப் பேசலாம். தமிழில் நல்ல வார்த்தைகளுக்கா பஞ்சம்? // அவர் சொன்னவற்றில் பீ சாப்பிடுகிறானா சாப்பாடு சாப்பிடுகிறானா மயிரைப் பிடுங்கினானா என்னும் // ஐயா இதுவுமே நல்ல வார்த்தைகள் இல்லைதானே இல்லையா..அதுவும் ஒருமையில் விளித்துப் பேசுவது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை. உங்கள் கருத்துகளை வழிமொழிகிறோம் ஐயா...

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. திரு. துளசிதரன் அய்யா அவர்களுக்கு,
    தங்கள் பதிவில் வேறொருவர் கூறியதாகக் குறிப்பிடும் சொற்கள், பீ ,மயிர் இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள் தான். ஆனால், இலக்கணத்தில் மங்களமாகக் குறிப்பிட வேண்டும் என்ற நோக்கில் “பகரவி” என்று குறிப்பிடுவர். ”மயிர்” என்ற சொல் சொல்லக் கூச்சமாக இருப்பதால் “முடி” என்கிறோம். “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்” எனக் கூறும் போது கொச்சையாகத் தெரியாது.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    கரூர்

    ReplyDelete
  9. Whatever words some crooks speak,please avoid using in your invaluable writeup by repeating those words

    ReplyDelete
  10. மிக தேவையான பதிவு.அருமை அய்யா

    ReplyDelete
  11. நல்ல தகவல் அய்யா.
    நாகரிகமான சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்று இவர்கள் உணர வேண்டும்.வசைபாடுவதற்கும் வரையறை உண்டு. ஆனால் வரம்புமீறி வார்த்தைகளை அள்ளி வீசியது மிகவும் தவறு. அதைத்தான் திரு. துளசிதரன் அய்யா அவர்களும் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வார்த்தைகள் தவறில்லை என முனைவர் ரா.லட்சுமணசிங் அவர்கள் குறிப்பிட்டுள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

    ReplyDelete
  12. ஐயா, இன்று பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் எனும் போர்வையில் சில சமூக விரோதிகள் தங்களுக்கு தோன்றுவதை எழுதியும், அடுத்தவரைக் காயப் படுத்த பேசியும் வருகிறார்கள். இன்று பல குரூர்கள் தழிழர் என்ற போர்வையில் ஒரு தீவிரவாதமே நிகழ்த்தி வருகிறார்கள். ரஜினி காந்த் தமிழன் இல்லையாம். காந்தி நேரு போன்றோரும் தான் தமிழர் இல்லை. அவர்கள் பெற்றுத்தந்த விடுதலை எனக்கு வேண்டாம் எனச் சொல்ல எவனுக்காவது (மன்னிக்கவும்) வீரம் இருக்குமா? இழிகுலத்தில் பிறந்தோரே இழிவான செயல் செய்வர் எனும் வள்ளுவர் வாக்கு சரிதானே ஐயா.

    ReplyDelete